திருநங்கைகளுக்கான சித்திரை திருவிழா, கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது.
இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில்இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தை அடுத்த கூவாகம் கிராமத்திற்கு வந்து குவிந்துள்ளனர்.
இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் கடந்த 2 நாட்களாக விழுப்புரம் நகரில் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை, தமிழ்நாடுஎய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து மிஸ் கூவாகம் நிகழ்ச்சியை நடத்தியது.
காலை 10 மணியளவில் திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பாடலுக்கேற்ப நடனமாடி அசத்தினார்கள். அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக மற்ற திருநங்கைகள் குத்தாட்டம் ஆடினார்கள்.
அழகிப்போட்டி முடிந்ததும் மிஸ் கூவாகம்-2022 அழகிப்போட்டிக்கான முதல் சுற்று நடந்தது. இதில் விழுப்புரம், கடலூர், சென்னை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், புதுச்சேரி, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50 திருநங்கைகள் கலந்து கொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.
இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இப்போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவணை ஆகியவற்றின்அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 15 பேர் 2-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து 2-ம் சுற்று மற்றும் இறுதிச்சுற்றுக்கானஅழகிப்போட்டி, விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான்,விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்ற அலுவலர்களும் கலந்து கொண்டனர். மேலும் நடிகை, நடிகர்கள் ( பிக் பாஸ் ஜூலி, அபிராமி, வந்தனா, சீரியல் நடிகை சுந்தரி , நடிகர் ராஜ்கமல், சந்திரசேகர் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து திருநங்கைகளின் பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்ததும் அழகிப்போட்டி தொடங்கியது. 2-வது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேரும் மீண்டும் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர்.
தமிழ் கலாச்சாரம், நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில் 7 பேர் 3-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மிஸ் கூவாகமாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக இவர்கள் 7 பேருக்கும் பொது அறிவுத்திறன் குறித்தும், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் சிறந்த முறையில் பதில்அளித்த சென்னையை சேர்ந்த மெஹந்தி மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார்.
திருச்சியை சார்ந்த ரியானா இரண்டாம் இடத்தினையும், சாக்ஷி ஸ்வீட்டி மூன்றாம் இடத்தினை பிடித்து மிஸ் கூவாகம் பட்டத்தினை வென்றனர்.
சிறந்ததிருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.