கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து காங்கிரசார்
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே கேஸ் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் ,கேஸ் விலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் பல்வேறு தரப்பு மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வதை கண்டித்தும், கேஸ் விலை உயர்வை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் விழுப்புரம் மாவட்ட தலைவர் சீனிவாச குமார் தலைமையிலானோர் கேஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தின் நடுவே திடீரென காங்கிரசார் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் அமர்ந்து பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீசார் மறியலிலி ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.