தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் தேங்காய் விளைச்சல் அதிகமாக இருப்பதால் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறி வருகின்றனர்.
தேங்காய் வியாபாரம் :-
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் நெல்,வாழை திராட்சை ஆகிய விவசாயத்திற்கு அடுத்தபடியாக தென்னை அதிக அளவில் சாகுபடி நடைபெற்று வருகின்றது .
தேனி மாவட்டத்தில் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகின்றது . கம்பம், சின்னமனூர் , கூடலூர், உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது.
கடந்த மாதத்தில் தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால், தேங்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது. ஆனால் உரிய விலை கிடைக்கவில்லை.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு கேரளாவில் இருந்து வரும் மொத்த வியாபாரிகளும் சில்லரை வியாபாரிகளும் தேங்காய் வாங்குவதற்கு அதிகளவில் வருவதில்லை.
கிலோ 35 ரூபாய்க்கு விற்ற நிலையில் இப்போது 14 ரூபாய்க்கு வாங்குவதற்கு கூட வியாபாரிகள் வருவதில்லை. இதனால், விவசாயிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு தேங்காய் ஒரு டன் 30 ஆயிரத்திற்கு மேல் விற்பனையாகி வந்தது, தற்போது இந்த ஆண்டு ஒரு டன்னின் விலை 26 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதனால் வேலையாட்களுக்கு கூலி கொடுக்க முடியவில்லை மேலும், மரங்களுக்கு உரங்கள் வாங்க முடியவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர் .
சபரிமலை சீசன் தொடங்கியவுடன் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டுவதற்கு தேங்காயை அதிகமாக வாங்கி செல்வார்கள் ஆகையால் ஐயப்பன் கோவில் சீசன் சமயங்களில் தேங்காயின் விலை உச்சத்தில் இருக்கும் ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக தேங்காய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது என்கின்றனர் விவசாயிகள்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.