போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நகராட்சி சேர்மன் திடீர் ஆய்வு நடத்தினார்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் :-
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பரமசிவன் மலைக்கோவில் அருகே அமைந்துள்ளது. இங்கு குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு இரண்டு மிகப்பெரிய ராட்சத தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள 33 வார்டுகளுக்கும் குடி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் சுகாதாரமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டு வந்ததாக நகராட்சி தலைவர் ராஜ ராஜேஸ்வரியிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். பொதுமக்களின் புகாரையடுத்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் சுத்தமான சுகாதாரமான முறையில் குடிதண்ணீர் வழங்க வேண்டும் என நகராட்சி ஊழியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் போடி நகராட்சி ஆணையாளர் ஷகிலா மற்றும் தலைமை பொறியாளர் செல்வராணி மற்றும் முன்னாள் நகர்மன்றத் துணை தலைவர் சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.