தேனி : கண்ணகி கோவில் திருவிழாவை நடத்துவதற்காக இரு மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ஆட்சியர்கள், உயர் அதிகாரிகளிடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் நடந்தது - கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேக்கடி ராஜீவ்காந்தி கலையரங்கத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
கண்ணகி கோவில் திருவிழா :-
தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலா விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் . தமிழக கேரள மலைப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் கோவில் திருவிழா நடைபெற முன் ஏற்பாடு ஆலோசனை கூட்டம் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர், இரு மாநில வனத்துறை அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
ஏப்ரல் 16-ஆம் தேதி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறுவதை ஒட்டி, தேக்கடி ராஜீவ்காந்தி கலையரங்கத்தில் இரு மாநில அதிகாரிகளிடையே ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது
ஆலோசனை கூட்டம் :-
தேனி மாவட்ட ஆட்சி தலைவர் முரளிதரன், இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷிபா ஜார்ஜ், தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் , தேனி மற்றும் இடுக்கி மாவட்ட வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டு, திருவிழாவிற்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்தும், பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள், உணவு மற்றும் குடிநீர் வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

Theni - Idukki District Collectors
ஆர்டிஓ தலைமையிலான கூட்டம் :-
இதற்கு முன்பாக உத்தமபாளையம் ஆர்டிஓ கௌசல்யா மற்றும் உத்தமபாளையம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா தலைமையில், உத்தமபாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை இடுக்கி மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்கள் இடையே நடைபெற்ற கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது .
இந்த கூட்டத்தில் போக்குவரத்து, நடைபாதையில் பக்தர்களுக்கு கேரள வனத் துறையால் ஏற்படுத்தப்படும் கெடுபிடிகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.
கோரிக்கைகள் :-
அறக்கட்டளையினர் கண்ணகி கோவில் திருவிழா அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அறக்கட்டளை சார்பாக கூடுதலான வாகனங்களை அனுமதிக்க கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அன்னதானம் வழங்க அறக்கட்டளையினருக்கு கடந்த காலங்களைப் போல 6 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதார வளாகம், முறையான குடிநீர், முதல் உதவி மையம் போன்றவைகள் ஏற்படுத்தித் தர கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற அரசு அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கூறினர்.
வழக்கமாக கண்ணகி கோவில் திருவிழாவிற்கு வாகனங்கள் செல்ல காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதி அளிக்கப் பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 2 மணி வரை மட்டுமே கேரள வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மலைப் பக்கத்தில் உள்ள கண்ணகி கோவிலுக்கு வாகனங்கள் செல்ல வாகன பாதையில் உள்ள முட்புதர்களை வனத்துறையினர் முழுமையாக அகற்றி தரவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மூன்று நாள் திருவிழா :-
கோவில் பகுதிக்கு வாகனங்கள் செல்வதற்கான நேரத்தை குறைத்து உள்ளதால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, வாகனங்களை அனுமதிப்பதற்கான நேரத்தை அதிகப்படுத்த போராடுவோம் என கண்ணகி அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், \" எங்கள் அறக்கட்டளையின் நீண்ட நாள் கோரிக்கையான கண்ணகி கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால் அதற்கு கேரள அதிகாரிகள் மறுத்து விட்டனர். கோவிலில் மூன்று நாள் திருவிழா நடப்பதற்காகவும், ஒரு நாள் முழுவதும் ஜீப் வாகனங்களை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க கூடுதல் மணி நேரம் பெறவும் உச்ச நீதிமன்றத்தில் சென்று நீதி பெறுவோம் எனவும், கேரளா அரசு மக்கள் கண்ணகி கோவிலுக்கு சென்று வழிபடுவதை விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.