தேனி மாவட்டம் பி.சி.பட்டி பேரூராட்சியை கைப்பற்றிய அமமுகவைச் சேர்ந்த நகர்மன்ற தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா.
பதவி ஏற்பு :-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த பின்பு, பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவராக மிதுன் சக்கரவர்த்தியை தேர்ந்தெடுத்தனர். துணை தலைவராக மணிமாறன் தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இவர்களுக்கு செயல் அலுவலர் ஜெயந்த் மோசஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழா முடிவடைந்த பின்பு முதல் மன்ற கூட்டமும் நடைபெற்றது.
அப்போது, பேரூராட்சி மன்றத் தலைவரான மிதுன் சக்கரவர்த்தி கூறுகையில், ''அண்மையில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் போன்று, ஏரியா சபை கூட்டம் நடத்துவதற்கு வழிமுறைகள் வழங்கப்பட்ட நிலையில், பழனிச்செட்டிபட்டி பேரூராட்சியிலும் ஏரியா சபை நடத்திட 15 வார்டுகளிளும் ஏரியா சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து மக்கள் பிரச்சனைகளை நேரடியாகவும், விரைவாக நிறைவேற்றிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பழனிச்செட்டிபட்டியில் நீண்ட நாள் கோரிக்கையான மின் மயானம் அமைக்கும் திட்டத்திற்கான அங்கீகாரம் முதல் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேறு எந்த பேரூராட்சியிலும் இல்லாத வகையில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய லெட்சர் ஒன்று வைத்து பொதுமக்கள் தங்களது குறைகளை அதில் எழுதி மூன்று நாட்களுக்குள் அதற்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியான ஓ.ராஜா பழனிசெட்டிபட்டி பேரூராட்சியை அமமுக கைப்பற்றிய நிலையில், மன்ற தலைவரான மிதுன் சக்கரவர்த்திக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுக ஆதரவுடன், அமமுக கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.