நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ளது கண்ணூர் பட்டி என்று ஊர். இங்குள்ள சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் திருவிழா வருடா வருடம் பங்குனி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.
இதனிடையே இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 15 தினங்களுக்கு முன்பு பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான வீதி உலா வருதல் சிறப்பாக நடந்தது. இதில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தார். அதன்பின் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
மேலும் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து கோவிலை சுற்றி வருதல், அலகு குத்துதல், பூங்கரகம் எடுத்தல் போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காளியம்மன் வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கண்ணூர்பட்டி மாரியம்மன் கோயில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர்த் திருவிழாவில் ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, புதுச்சத்திரம், சேலம், ஆத்தூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் விழாவில் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.