குற்ற வழக்குகளில் கைது செய்ய காவல்துறையினர் வரும் போதெல்லாம் கையில் தன்னைத் தானே பிளேடால் அறுத்துக் கொண்டு தப்பிவந்த குற்றவாளி கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் நாகராஜ் (எ) அஜித். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வருபவர்.
இவரை குற்ற வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் கைதுசெய்ய முயலும்போது அவர் தன்னைத் தானே பிளேடால் தனது கைகளில் வெட்டி ரத்தக் காயம் ஏற்படுத்திக் கொண்டு போலீசார் கைது செய்வதில் இருந்து தப்பித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 28 இரவு அவனியாபுரம் MMC காலனியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் பெரியார் பஸ் ஸ்டாண்டு அருகே டூவீலரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அஜித் மற்றும் அவரது கும்பல் குறுக்கிட்டு விக்னேஷின் செல்போன், டூவீலர் ஆகியவற்றை பறித்துக் கொண்டு விக்னேசை அடித்து உதைத்து காயப்படுத்தி விட்டு தப்பினார்.
இந்த வழக்கு சம்பந்தமாக மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின்படியும், காவல் துணை ஆணையர் தெற்கு தங்கதுரை ஆலோசனைபடியும் திடீர்நகர் சரக காவல் உதவி ஆணையர் ரவீந்திர பிரசாத் தலைமையில் தீவிர குற்றத் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் மணிக்குமார் மற்றும் தனிப்படையினர் அதிரடியில் இறங்கினர்.
நீண்ட நாட்களாக காவல்துறை கைது செய்வதில் இருந்து தப்பிவந்த மேலவாசல் அஜித் மற்றும் அவனது நண்பர்கள் நான்கு பேர்களையும் தனிப்படையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். அஜித் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.