நான்
மதுரை மீனாட்சி கோயில் பார்வதி யானை. திருவிழாவில் கம்பீர நடைபோடுவதில் மகிழ்ச்சி. வாய்திறந்து பேசமுடியாதுதான். ஆனால் என் வரலாறும் நான் சொல்லும் வரலாறும். முக்கியம்.
நாங்கள் தற்கால அழியும் இனப் பட்டியலில். மன்னர் காலத்தில் போற்றப்பட்டோம்; போரில் நின்று வென்றோம், வீழ்த்தப்பட்டோம். அப்போதும் எங்கள் இனப் பெருக்கம் அபரிமிதமாகவே. பணிகளில் உயரத்திற்கும், பாரத்திற்கும் கிரேன், பொக்லைன் இன்றுண்டு. அன்றெல்லாம் நாங்கள்தானே.
கோயில் கட்டுமானங்களில் அதிகம் துணை புரிந்த எமக்கு கோயிலின் அங்கமாகவே இடம். தினம் நதியில் தீர்த்தம் எடுப்பது, விழாவில் தேர்தள்ளிக் கொடுப்பது என ஆன்மிகப் பணியில் பங்கு அதிகம். கோயிலில் நாங்கள் வளர, உற்சவத்தில் உடன்வர ஆன்மிக, அறிவியல், சாஸ்திர, ஜோதிடக் காரணங்கள் உண்டு.
இதையும் படிங்க: விசிறி சேவகம்... நந்தியாட்டம்... கயிலாய வாத்தியம்... அடியார் கூட்டத்தால் அமர்க்களப்படும் ஆலவாய் நகரம்!
பக்தர்கள் கோயில் பிரமாண்ட கட்டிட அழகு பார்த்து சொக்குவர். கண்ணடி படாதிருக்க நாங்கள் அங்கு நிற்போம். எங்கள் அழகும் கம்பீரமும் அவர்களுக்கு வியப்பு. ஆலயக் கண்ணூறு கழியும். ஊருக்கே ஆபத்தா? காத்துக்கொள்ள வழி உண்டு கோயில்களில். உதாரணம், கும்பாபிஷேக கலச நவதானியங்கள்.

Meenatchiamman Temple Elephant Parvathy
ஊரே வெள்ளமாகி வயல்நிரம்பி தானியங்கள் அழிந்தாலும் கலச தானியம் கொண்டு விதைப்பு தொடங்கலாம். இருமல் சார்ந்த கக்குவான் கொடிய நோய். அதற்கு எங்கள் இனத்தின் அதிகாலை கோமியத்தை மூன்றுநாள் பருக நோய் தீவிரம் குறைந்து குணமாகுமாம். நோய்க்கு மருந்தாகும் நாங்கள் ஊருக்கே சர்வரோக நிவாரணி.
இதையும் படிங்க: அள்ளிக் கொடுக்கும் நாயகன், ஆணவம் கெடுக்கும் நாயகி... முதல்நாள் திருஉலா!
ஊர்வலம் பக்கம் கூட்டத்தை ஈர்க்க உற்சவங்களில் முன் செல்கிறோம். ஈர்ப்பாற்றல் எங்களுக்கு அதிகம். கம்பீரமும் அழகும் ஒருபுறம். இன்னொன்று ராசி. விநாயகர் அம்சமான எங்களுக்கு கேது அமைப்பு. விநாயகருக்கும் அதுவே. ஈர்ப்பும், ஞானமும் தரவல்லவர் கேது. எனவே ஊர்வலத்தை ஈர்ப்போம். இவை கஜசாஸ்திரம் சொல்வன.
துர்சக்திகளும், தீய எண்ணம் கொண்டவர்களும் எங்களை நெருங்க முடியாது. நாங்கள் முன்னே செல்ல செல்ல ஊர்வல வீதிகள் சுத்தமாகும், தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பும் ஆகும். இதனாலேயே மீனாட்சி கோயிலில் நான் இருக்கிறேன். இத்தனை பெரிய ஆலயத்தில் நான் மட்டும் தனியாக. ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு இப்படியில்லை.

Parvathy Elephant
கடந்த 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மீனாட்சி கோயிலில் 12 யானைகள் இருந்தன. கந்த 1925 ஆண்டு வாக்கில் கோவிலில் 6 யானைகள். அடுத்து 1964ம் ஆண்டு வாக்கில் சங்கரன், சுந்தர், மீனாட்சி என மூன்று யானைகள். சங்கரனும், 1972 ஆண்டு வாக்கில் சுந்தரும் ஏலமானது.
இதையும் படிங்க: ஆடிமாதம் அம்மனுக்கு, ஐந்து மாதம் ஈசனுக்கு... கொடியேற்றமும் மீனாட்சி கோயில் கொடிமரங்களும்!
மீதமிருந்த மீனாட்சி 1947-ம் ஆண்டு பாலக்காட்டில் இருந்து பத்து வயது யானையாக ரூ.5,000-க்கு வாங்கப்பட்டது. கடந்த 1973-ம் ஆண்டு முதுமலை 'அங்கயற்கண்ணி' கோயில் வந்தாள். கடந்த 2000-ம் ஆண்டு வாக்கில் 'மீனாட்சி' இறந்தாள்.
அதே காலகட்டத்தில் தான், இப்போது இருக்கிற நான் கோயிலுக்கு வந்தேன். கேரளாவில் இருந்து அருணாச்சல பிரதேசம் சென்று அங்கிருந்து கோயில் வந்தவள். 2008-ம் ஆண்டு அங்கயற்கண்ணி இறந்தாள். மீதம் நான்!
நாங்கள் மட்டுமல்ல. ஒட்டகங்களும் இருந்தன. இரண்டு இருந்தன. கடைசியாக இருந்த 'சிவா' 2018-ம் ஆண்டு இறந்தான். வடமாநில மக்கள் ஒட்டகப் பயணமாக கோயில் வந்தபோது ஒட்டகங்கள் இங்கே நிலைத்திருக்கலாம். இப்போது அழிந்துவிட்டது.
இதையும் படிங்க: வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி.. இருவர் தொண்டால் ஊருக்கே கிடைத்த பாக்கியம்..!!
ஒருகாலத்தில் மதுரையில் சௌராஷ்டிரா கிருஷ்ணன் கோயில், கூடலழகர் கோயில், திருப்பரங்குன்றம் கோயில் இங்கெல்லாம் யானைகள் வளர்ந்தன. அவையும் உற்சவங்களுக்கு வரும். வீதியுலா முழுக்க முன்பகுதி யானைகளால் நிரம்பும். இப்போது தனியாய் தவிக்கிறேன்.
இனியேனும் நாங்கள் கூட்டமாக நிற்க வேண்டும், கோயிலிலும் ஊர்வலத்திலும். சரி, எனக்குப் பின்னால், ஆண்டின் 16 முறை தரிசனம் தருகிற கோலத்தில் ஈசன். தவறாமல் வணங்குங்கள், விசேஷமான கோலம்!
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.