உலகெங்கும் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்தியா முழுவதும் இந்த புனித திருநாள் கொண்டாட்டம் களை கட்டியிருக்கிறது
மதுரையில் பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.
தொழுகை முடிந்து இஸ்லாமிய பெருமக்கள் பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்தனர் அவர்களிடம் ரமலான் சிறப்புகள் குறித்து கேட்டோம். “அனைவருக்கும் ஈகைகள் செய்கிறோம். முப்பது நாள்களும் நோன்பு இருந்து மக்களுக்கு உணவளித்தோம். இன்று உலக மக்களின் நன்மைக்காக துஆ செய்தோம்” என்றார் எஸ்டிபிஐ பிஆர்ஓ சிக்கந்தர்.
பள்ளிவாசலின் பொருளாளர் ராஜ்கபூர் பேசுகையில் “ஏழை எளியவர்களின் வறுமை எவ்வாறு இருக்கும் என்பதை உணர நோன்பு கடைபிடிக்கும் மாதமே இந்தப் புனிதமிகு ரமலான். பிற சமயங்களை சார்ந்த எல்லா உறவுகளும் ஒன்றுமையுடன் வாழ இறைவனை நாங்கள் வேண்டுகிறோம்” என்றார்.
மாநகராட்சியின் 49-வது வார்டு கவுன்சிலர் செய்யது அபுதாகிர் பேசும் போது, “சகோரத்துவ தத்துவமே இந்த பண்டிகை. சாதி மத பேதம் கடந்து ஒற்றுமையுடன் மகிழ்ந்திருப்போம்” என்றார்.
“ஏக இறைவன் அனைத்து மக்களுக்கும் பொறுமையையும் கருணையையும் வழங்குவார். இறைவன் வசனமே, பெற்றோர், வழிப்போக்கர், உறவினர், அண்டை வீட்டார், தொழில் கூட்டாளிகள் என அனைவரும் உபகரணம் செய்யுங்கள் என்பதே. உபகரணம் என்றால் உதவி எனப் பொருள்” என்றார் மதுரை மாவட்ட எஸ்டிபிஐ துணை தலைவர் யூசுப்.
ஈகை திருநாள் உலக மக்களுக்கு நலமும் வளமும் அளிக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது எல்லோரது வேண்டுதல்களும்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.