கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று, வட்டக்கோட்டை. குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் நாகர்கோவிலின் கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவில் வட்டக்கோட்டை அமைந்துள்ளது. வடிவில் வட்டமாக இருப்பதால் இந்தப் பெயர்.
திருவாங்கூரின் வேணாட்டு அரசர்களால் கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் சீரமைக்கப்பட்டது. முதலில் செங்கற்கோட்டையாக அமைக்கப்பெற்ற இது, டச்சு தளபதி டிலனாய் அவர்களால் கற்கோட்டையாக வலுப்படுத்தப்பட்டது.
1809-ம் ஆண்டு ஆங்கிலப் படைகள் திருவாங்கூர் அரசை அழித்தபோது வட்டக்கோட்டையை மட்டும் விட்டுவிட்டனர். நான்குபுறமும் உள்கோட்டை, தூண்களுடன் கூடிய மண்டபம், சமமான கூரை போன்ற அமைப்புகளுடன் உருவாக்கப் பட்டுள்ளது.
குமரி துறைமுகத்தின் பாதுகாப்பு அரணாக இங்குள்ள படைகள் செயல்பட்டன. பீரங்கிகளைக் கொண்டுசெல்ல வசதியாக சாய்தளமும் கட்டப்பட்டிருக்கிறது. வெளிக்கோட்டைச் சுவர் முற்றிலும் கணமான கருங்கல்லால் செதுக்கிக் கட்டப்பட்டது.
சுவற்றின்மேல் திருவாங்கூர் அரசர்களின் சின்னம் இடம்பெற்றுள்ளது. கோட்டையின் நடுவில் அமைந்துள்ள நீர்நிலை இங்கு தங்கியிருந்த ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தரமான நீர் ஆதாரமாய் விளங்கியிருக்கிறது.
இக்கோட்டையில் கண்காணிப்பு அறை, ஓய்வறை, ஆயுத சாலை ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தன. பாண்டியர்களுக்கு கிபி 12ஆம் நூற்றாண்டில் முத்து கலாபத்தை ஏற்ற ராணுவத் தளமாகவும் இந்தக் கோட்டை இருந்தது.
தற்போது சுற்றுலா பயணிகள் அவ்வளவாக அனுமதிக்கப்படாத நிலையில், திங்கட்கிழமை வட்டக்கோட்டை சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனையடுத்து, ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
செய்தியாளர்: சார்லஸ் கிப்சன், நாகர்கோவில்
உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.