பரோல் கோரிய மனு மீதான விசாரணையில் காணொளிக் காட்சி மூலம் ஆஜராகி வாதிட நளினிக்கு ஆட்சேபனை உள்ளதா என அவரிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதேபோல இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட அனுமதி கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. 25 காவலர்கள் வரை பாதுகாப்பிற்காக அனுப்பிவைக்க வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் ஆஜராக நினைக்கும் ஒருவரை அரசு எவ்வாறு தடுக்கும் என கேள்வி எழுப்பினர். சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அரசு பாதுகாப்பு காரணங்களால் ஆஜர்படுத்த இயலாது என எவ்வாறு கூற முடியும் என சாடினர்.
மேலும், நளினியை காணொளி காட்சியின் மூலம் ஆஜர்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதுகுறித்து அடுத்த வாரத்திற்குள் நளினியிடம் தகவல் பெற்றுத் தர சிறைதுறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நளினியின் முடிவை வைத்து தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nalini, Rajiv death case