இன்றைய டாப் 10 செய்திகள்
1) ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.. 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, தடுப்பூசி சான்றிதழ், கொரேனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்றும் அறிவிப்பு
2) அவானியபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்தும்.. காளைகள், வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயம்.
3) தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை நாளை மறுதினம் காணொலியில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.
4) நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடக்கம்... சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
5) அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு... கொரோனா பரவலை பொறுத்து தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
6) சென்னையில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை..
7) பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, உச்ச நீதிமன்றம் சிறப்புக்குழுவை அமைத்துள்ளது.
8) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று... வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக ட்விட்டரில் பதிவு
9) முழு உடல் தகுதி உடன் இருப்பதாக விராட் கோலி அறிவிப்பு. மற்றவர்களின் விமர்சனங்களை பற்றி கவலையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
10) பேட்மின்டன் வீராங்கனை சாய்னாவை விமர்சித்து ட்வீட்... சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை
ஜல்லிக்கட்டு வீரர்கள், காளைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர் மற்றும் மாடுகள் மற்றொரு போட்டியில் பங்கேற்க முடியாது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் நபர்கள்/மாடுகள் உரிமையாளர் ஆகியோர் அடையாள அட்டை பெறுவதற்கு இ சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படும் மாடுகளின் தகுதியை கால்நடை துறை மருத்துவர்கள் ஆய்வு செய்த பின்னரே அனுமதி அளித்து அடையாள அட்டை வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு உள்ளூர் பிரமுகர்கள்வீடுகளுக்கு உறவினர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டு பகுதிகளில் சோதனை சாவடிகள் வைத்து வெளியூர் நபர்கள் பக்தி நடக்கும் பகுதிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட மாட்டாது. அடையாள அட்டை இல்லாத நபர்களை சோதனை சாவடி முன்பாகவே திருப்பி அனுப்பப்படும்.
இந்த ஆண்டு மாடுபிடி வீரர்கள், மாட்டு உரிமையாளர்களுக்கு காலை, மதியம் இரண்டு வேளை உணவு வசதி ஏற்பாடு செய்யப்படும். தற்காலிக கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்படும். கடந்த ஆண்டுகளில் இருந்த டோக்கன் விநியோகம் செய்யும் சிக்கல்கள், முறைகேடுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று
தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். லேசான அறிகுறி உள்ளதால் வீட்டு தனிமையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மட்டும் 70 காவலர்களுக்கு கொரோனா தொற்று
சென்னையில் மொத்தம் 70 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை காவல் துறையின் பெண் கூடுதல் ஆணையர் உட்பட 70 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்று ஏற்பட்டால் உடனடியாக தகவல் கொடுக்குமாறு காவல்துறையினருக்கு, காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தேவைப்படுபவர்களுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
நாகூர் தர்கா கந்தூரி விழாவில் பக்தர்களுக்குத் தடை
கொரோனா பரவல் காரணமாக, நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழா நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கான அனுமதிக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. என்று நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தார். முக்கிய நிகழ்ச்சிகளான ஜனவரி. 13-ஆம் தேதி சந்தனக் கூடு ஊர்வலம், ஜனவரி 14-ஆம் தேதி சந்தனம் பூசும் விழா, ஜனவரி 17-ஆம் தேதி கொடி இறக்கம் ஆகியவற்றில் பக்தர்கள் பங்கேற்க முற்றிலுமாக தடை எனவும், தர்காவின் பாரம்பரிய முறைப்படியான கந்தூரி விழா வழிபாடுகள் அனைத்தும் பக்தர்களின்றி நடைபெறும் என்று தெரிவித்தார்.
வடசென்னை ரேஷன் கடையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
வடசென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் அது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். ரயபுரம் ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டு திரும்பும் வழியில் மாஸ்க் அணியாமல் இருந்த இருவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாஸ்க் அணிவித்து விட்டார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன், தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை துவங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
கரூரில் தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜக வினரை, காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். பஞ்சாப் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கரூர் திண்ணப்பா தியேட்டர் எதிர்பறம் தடையை மீறி பாஜக பட்டியல் அணி சார்பில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை குண்டு கட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது? அமைச்சர் பொன்முடி
அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும் கொரோனா தொற்று பரவலை பொறுத்து செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தற்போது மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கான விடுமுறையில் உள்ளனர், இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கல்லூரிகளில் அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.