ATM Robbery | ஏ.டி.எம்.களையே ஏமாற்றி நூதன கொள்ளையடிப்பவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு...
ATM Robbery | ஏ.டி.எம்.களையே ஏமாற்றி நூதன கொள்ளையடிப்பவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு...
சென்னையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களையே ஏமாற்றிய கொள்ளையடிப்பவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு கொள்ளையர்களும் ஹரியானாவிற்கு தப்பி சென்றுள்ளனர்.
சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலையில் உள்ளது எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். இங்கு மேலாளராக பணியாற்றி வரும் முரளி பாபு இரு தினங்களுக்கு முன்பு கணக்கு சரிபார்த்த போது ஏ.டி.எம்.-ல் ஒன்றரை லட்சம் ரூபாய் மாயமாகி உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏ.டி.எம்.-க்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் நூதன முறையில் ஒன்றரை லட்சத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
அதாவது ஏ.டி.எம்.-ல் பணம் வரும் போது அந்த ஷட்டரை 20 நொடிகள் கையால் தடுத்தால், பரிவர்த்தனை நடக்காதது போல வாடிக்கையாளர் கணக்கில் மீண்டும் பணம் வரவாகிவிடும், இந்த நூதன முறையை பயன்படுத்திதான் இவர்கள் ஒன்றரை லட்சம் ரூபாயை கொள்ளையடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இதே பாணியில் விருகம்பாக்கத்தில் 50000, வேளச்சேரியில் 4,98000 , தரமணியில் 3, 54,500, வடபழனி நூறடி சாலை ஏ.டி.எம்.-ல் 69000 ரூபாயும் கொள்ளையடித்தது தெரியவந்தது.
சென்னையில் இவர்கள் 2 அல்லது 3 நாட்கள் முகாமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி வேலூர், ராணிப்பேட்டை போன்ற பிற மாவட்டங்களிலும் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தையே ஏமாற்றி கொள்ளையடிக்கும் இந்த நூதன கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்கட்ட விசாரணையில் இவர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், எஸ்.பி.ஐ. ஏடிஎம்-களை மட்டுமே குறிவைத்து கைவரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் இருவரும் ஹரியானா மாநிலத்திற்கு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.