ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாள்களுக்கு உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதோடு, தாய்மார்களுக்கும் மார்பக புற்றுநோய் அபாயம் குறைகிறது.
என்ன தான் குழந்தைகள் விதவிதமான பெயர்களுடன் இருக்கும் உணவுகளைச் சாப்பிட்டாலும், தாய்ப்பாலுக்கு ஈடு எதுவும் இல்லை. 10 மாதம் தாயின் கருவறையிலிருந்து வெளியே வந்தவுடன்,தாயின் மார்பில் பால் குடிப்பதற்குத் தத்தளிக்கும் தருணத்தை வார்த்தைகளால் கூற முடியாது. இது தாய்க்கும், சேய்க்கும் இடையே உள்ள உறவின் பிணைப்பை நமக்கு எடுத்துரைக்கும்.
குழந்தைப்பிறந்தது முதல் தொடர்ந்து 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் குடிப்பது குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதோடு ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளின் அபாயத்தைக்குறைக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால் குழந்தைகள் பல உடல் நலப்பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
இந்த சூழலில் தான் தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிப்பதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு கடந்த 1990 ல் ஒரு ஆணையை உருவாக்கியது. அதன்படி கடந்த 1992 ஆம் ஆண்டு வாபா என்ற அமைப்பால் முதல் முறையாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை தாய்ப்பால் வாரத்தைக் கொண்டாடினர். இந்த வாரங்களில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் அதில் உள்ள நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சுமார் 70 நாடுகள் இந்த வாரத்தை நினைவு கூர்ந்து வந்த நிலையில், தற்போது 170 நாடுகளால் தாய்ப்பால் கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை முன்வைத்து தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு அதாவது உலக தாய்ப்பால் வாரம் 2022க்கு “ தாய்ப்பால் கொடுப்போம் வாருங்கள்“ என்ற தலைப்போடு கொண்டாட்டம் இன்று முதல் துவங்கியது. இப்படி உலக நாடுகள் முழுவதும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றிவரும் வேளையில் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள்:
கர்ப்பகாலத்தில் தாய்மார்களின் எடை அதிகரிக்கும். குழந்தைப் பிறந்து தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தவுடன் எடை விரைவாகக்குறைய ஆரம்பிக்கும்.
பிரசவத்திற்குப் பின் தாய்மார்களுக்கு அதிகப்படியான இரத்தபோக்கு மற்றும் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று ஏற்படும். தாய்ப்பால் கொடுக்கும் போது இப்பிரச்சனைகளின் அபாயம் குறைகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இரத்த சோகை, கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், முடக்கு வாதம், லூபஸ், எண்டோமெட்ரியோசிஸ், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களை உருவாக்கும் வாய்ப்புகள் குறையக்கூடும்.
தாய்மார்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு. தன்னம்பிக்கை மற்றும் சுய மரியாதையை அதிகரிக்கிறது. இதோடு தாய் மற்றும் குழந்தைக்கு இடையே உள்ள பிணைப்பை அதிகரிக்கிறது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்:
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. பிற தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, இரைப்பை குடல் அழற்சி, சளி ,நிமோனியா மற்றும் இருமல் போன்ற சுவாச நோய்கள் உள்படப் பல உடல் நலப்பிரச்சனைகளின் அபாயத்தைக்குறைக்கிறது.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் ஒவ்வாமை, அழற்சி, ஆஸ்துமா ஆகியவற்றின் அபாயத்தைக்குறைக்கிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை குறைப்பாட்டை சரிசெய்ய உதவுகிறது. மேலும் தீடிரென குழந்தை இறப்பை ஏற்படுத்தும் (Sudden Infant Death Syndrome (SIDS) நோய்த்தொற்று அபாயத்தைக் குறைக்கிறது.
தாய், சேய்க்கான உறவை மேலும் வலுப்படுத்துகிறது. தாய் மற்றும் சேய் என்றாலே பாசத்தின் பிணைப்பு தான். அதிலும் ஆசையோடு தாய்ப்பால் கொடுக்கும் போது இத்தனை நன்மைகள் நமக்குக் கிடைக்கிறது என்றால் இனி தாய்ப்பால் கொடுப்பதை யாரும் நிறுத்திவிடாதீர்கள். குழந்தைகள் பெரியதாகி விட்டால் என்ன வேண்டுமானாலும் கொடுத்து வளர்க்கலாம். ஆனால் பிறந்தவுடன் அவர்களுக்குத் தாய்ப்பால் அவசியம் என்பதை நாம் புரிந்துகொண்டு இனி அனைவரும் செயல்படுவோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breastfeeding, Child Care, Mother Feed, New born baby, World breastfeeding week