நீங்கள் ஒரு கலாரசிகர் , அதுவும் பாரம்பரிய கலை, ஓவியங்களை தேடி வாங்குபவர். அல்லது அந்த கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பவர் என்றால் நிச்சயம் இது உங்களுக்கான செய்தி தான். ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ நிறுவனத்தால் அருவமான கலாச்சார பாரம்பரியம் என்று சான்றளிக்கப்பட்ட ஒரு கலை வகையையும் அதை செவ்வனே செய்து வரும் ஒரு கிராமத்தை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.
ஒடிசா வளமான கலை மற்றும் கலாச்சாரம் நிறைந்த இடம். பண்டைய காலங்களிலிருந்து பல்வேறு கலை வகைகள் ஒடியா மக்களின் வாழ்க்கை முறையோடு ஒன்றி இருக்கின்றன.அதில் பட்டசித்ரா கலையும் ஒன்று. இது ஒடிசாவின் ரகுராஜ்பூரில் உள்ள சித்ரகார குடும்பங்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய கலை அல்லது ஓவியத்தின் ஒரு வடிவமாகும்.
பட்டா சித்ரா என்பது இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது, "பட்டா" என்றால் துணி மற்றும் "சித்ரா" என்றால் ஓவியம். பட்டசித்ரா "பட்ட சித்ரா", "பிட்டி சித்ரா"(சுவர்) மற்றும் "பொதி சித்ரா" போன்ற ஓவியங்களுக்கு பயன்படுத்தப்படும் ஊடகத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களின் கருபொருளாக பெரும்பாலும் புராண சம்பவங்கள் தான் உள்ளன.
அனைத்து பட்டசித்ரா ஓவியங்களும் ஜகந்நாதர் மற்றும் மும்மூர்த்திகளின் பாரம்பரியக் கதைகள், ராதா-கிருஷ்ணரின் கிருஷ்ண லீலா, விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் (தசா அவதாரம் பட்டி), ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் கதைகள், விநாயகப் பெருமானின் ஐந்தாக சித்தரிக்கப்பட்ட கதைகள். தலைமை தெய்வம் (பஞ்சமுகி) ஆகிய உருவங்களைக் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, இந்த பட்டாசித்ரா ஓவியங்கள் ஒடிசாவின் ஜகன்னாத கலாச்சாரத்தை சித்தரிக்கின்றன.
கேன்வாஸ் முதல் வண்ணங்கள் வரை, ஒவ்வொரு சிறிய விஷயமும் பட்டா ஓவியர்கள் குடும்ப உறுப்பினர்களால் தயாரிக்கப்படுகிறது. ஓவியம் வரையும் அடிப்படை கேன்வாஸ் துணியை உருவாக்க பருத்தி துணியின் மீது, புளி விதை பசை அல்லது காய்த்தா கம் மூலம் ஒரு கெஸ்ஸோவை தயார் செய்து, அதை சுண்ணாம்பு தூளுடன் கலந்து பேஸ்ட் செய்து கற்களை பயன்படுத்தி பூசுகின்றனர்.
நிறங்களை பொறுத்தவரை வெள்ளை நிறம் சங்கை பொடியாக்கி காய்ச்சி எடுப்பதில் இருந்து, சிவப்பு நிறம் 'ஹிங்குலா' என்ற கனிமத்திலிருந்தும், மஞ்சள் நிறம் 'ஹரிதாலா' என்ற கல்லிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. 'ராமராஜா' என்ற இண்டிகோவில் இருந்து நிறம் பிரித்தெடுக்கப்படுகிறது, எரியும் புளங்கா எண்ணெய் அல்லது தேங்காய் மட்டைகளை எரிப்பதில் இருந்து கருப்பு நிறம் சேகரிக்கப்படுகிறது, மேலும் பச்சை நிறம் வேப்ப இலைகளிலிருந்து பெறப்படுகிறது. இவற்றை மூங்கில் குச்சிகளால் செய்யப்பட்ட தூரிகை (brush) மூலம் ஓவியம் வரைய பயன்படுத்துகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ரகுராஜ்புர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தலைமுறை தலைமுறையாக இந்த கலை வடிவத்தை அழகாக பாதுகாத்து வருகின்றனர். இதற்காக இந்திய அரசு ரகுராஜ்பூரை பாரம்பரிய கைவினைக் கிராமமாக அங்கீகரித்துள்ளது. சமீப ஆண்டுகளில் ரகுராஜ்பூர் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறியுள்ளது, உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
இதையும் பாருங்கள் : தர்மதுரை படத்துல விஜய்சேதுபதி குளிச்ச அருவி இது தான்..! எங்க இருக்கு தெரியுமா?
இங்குள்ள கலைஞர்கள் இந்த கலையை பற்றி பயணிகளுக்கு விலகுவதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு கற்றும் தருகிறார்கள். இயற்கையாக தயாரிக்கப்படும் நிறங்களை உருவாக்கவும், பயன்படுத்தவும் கூட கற்றுக்கொள்ளலாம். நீங்கள் பட்டசித்ரா ஓவியத்தை கற்க விரும்பினால் நிச்சயம் ரகுராஜ்பூருக்கு செல்லுங்கள்.
பூரி நகரத்திலிருந்து வெறும் 14 கிமீ தொலைவிலும், தலைநகர் புவனேஸ்வரில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது . புவனேஸ்வர் வரை ரயில் அல்லது விமானம் மூலம் சென்றுவிட்டு அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Odisha