நவராத்திரி பண்டிகையை ஒட்டி, மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் செல்வதற்கான சிறப்புச் சுற்றுலா திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. 9 நாட்களைக் கொண்ட நவராத்திரி பண்டிகை தினங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் இந்த சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆக, நவராத்திரி சிறப்பு ரயில் சுற்றுலா திட்டம் என்பது 4 இரவுகள் மற்றும் பகல்களைக் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலானது புது டெல்லியில் உள்ள சாஃப்தார்ஜங் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி புறப்பட்டு, அதற்கு அடுத்த நாள் காஷ்மீர் அருகே உள்ள காத்ரா ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது.
பயணத் திட்டத்தில் கிடைக்கும் வசதிகள்
இந்தப் பயணத்தின்போது பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை ஐஆர்சிடிசி நிறுவனம் வழங்குகிறது. உணவு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இந்த சுற்றுலாப் பயணத்திற்கு பாரத் கௌரவ் ரயில் பயன்படுத்தப்பட உள்ளது. மூன்றாம் நிலை ஏசி பெட்டிகளில் 600 பக்தர்கள் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
Also Read : டிஎன்ஏவுக்கும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும் இப்படியொரு தொடர்பா..? ஆய்வில் ஆச்சரியம்
மாதா வைஷ்ணவ தேவி கோவிலைப் பார்வையிடவும், அங்கிருந்து விடுதிக்குத் திரும்பவும் பக்தர்களின் வசதிக்காக ஐஆர்சிடிசி சார்பில் பேருந்து சேவை வழங்கப்படும். இந்த சுற்றுலாவுக்கு இரட்டை இருக்கை அடிப்படையில் ரூ.11,990 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டி வரி உள்ளடக்கிய கட்டணமாகும்.
உணவு, பயணம், தங்குமிடம் என அனைத்து செலவுகளும் இதில் அடங்கும். பக்தர்கள் தனி அறையில் தங்க வேண்டும் என்று விரும்பினால் ரூ.13,790 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இரண்டு அல்லது மூன்று நபர்கள் உள்ள அறையில் தங்குவது என்றால் ரூ.11,990 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 5 வயது முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு ரூ.10,795 கட்டணமாகச் செலுத்தினால் போதுமானது.
ஐஆர்சிடிசி பயணத் திட்டம்
பயணத் திட்ட அறிக்கையை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் நாள் காத்ரா ரயில் நிலையத்திற்குப் பக்தர்கள் வந்தடைகின்றனர். அங்கு மதிய உணவு சாப்பிட்ட பிறகு பக்தர்கள் மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர். ஒரு முழு இரவு மற்றும் பகல் பொழுதை வைஷ்ணவ தேவி கோவிலில் பக்தர்கள் செலவிடலாம். இரவு கோவிலில் தங்குவதற்கு விரும்பாத பக்தர்கள் விடுதிக்கு வந்து தங்கி, அங்கேயே இரவு உணவு சாப்பிடலாம்.
Also Read : டெங்கு காய்ச்சல் அடிக்கடி ஏற்பட்டால் பாதிப்புகள் தீவிரமாகும் : IgG சோதனையில் உறுதி..!
பாரத் கௌரவ் ரயில் குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து மத்திய அரசு இந்த ரயிலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் வாய்ந்த இடங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த ரயில்களில் சுற்றுலா செல்லலாம். இந்திய ரயில்வே இதுவரையில் இரண்டு பாரத் கௌரவ் ரயில்களை இயக்கி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IRCTC, Navarathri, Temple, Tour