கோட்டைகளின் நகரம் என்றாலே ராஜஸ்தான் தான். சுற்றி சுற்றி கோட்டைகள், மாளிகைகள் என்று அமைந்திருக்கும் அவற்றில் பல வீரம் பொருந்திய வரலாற்று கதைகளை பறைசாற்றும். அதே வேளையில் ஒரு சில இடங்கள் திகிலூட்டும் கதைகளையும் சொல்லும்.
அப்படி சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை மக்களை உள்ளே நுழைய அனுமதிக்காத பங்கார் கோட்டையைப் பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அதே போல ராஜஸ்தானில் உள்ள மற்றொரு திகில் இடமான கோட்டாவில் உள்ள பிரிஜ்ராஜ் பவன் பேலஸ் ஹோட்டலைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
பங்கார் கோட்டை அளவுக்கு இந்த இடம் உயிர் பயத்தை காட்டாவிட்டாலும் கொஞ்சம் திக் திக் நிமிடங்களை விட்டுச்செல்லும். பேய் மனிதனை பளார் என்று அறையும் காட்சிகளை எல்லாம் படத்தில் தானே பார்த்திருப்போம். ஆனால் இந்த கோட்டா மாளிகையில் நிஜத்திலேயே நடக்கிறதாம்.
சம்பல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பிரிட்டிஷ் காலத்திய பிரிஜ்ராஜ் பவன் அரண்மனை உயர்ந்த , பல விசாலமான மாடங்கள், சுற்றி அழகிய தோட்டம், பெரிய பெரிய அறைகள், கலை ஓவியங்கள் என்று நிரம்பி உள்ளது.
1830 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பிரிஜ் ராஜ் பவன் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது பிரிட்டிஷ் அதிகாரி மற்றும் அவர்களது குடும்பத்தினரால் தனிப்பட்ட இல்லமாக பயன்படுத்தப்பட்டது. 1857ல் புகழ்பெற்ற சிப்பாய் கலகம் வெடித்தபோது, இந்திய வீரர்கள் குழு பிரிஜ் ராஜ் பவன் அரண்மனையையும் தாக்கியது. சிப்பாய்கள் அரண்மனையை சூறையாடியதால் அவர் தனது இரண்டு மகன்களுடன் மேல் அறை ஒன்றில் அடைக்கப்பட்டார். ஐந்து மணிநேர முற்றுகைக்குப் பிறகு அவர்கள் சரணடைந்தபோது, வீரர்கள் அனைவரையும் கொன்றனர்.
அதன் பிறகு, அப்போதைய கோட்டா மன்னர் இறந்த உடல்களை மீட்டு அரண்மனையின் மைய மண்டபத்தில் உரிய மரியாதையுடன் புதைத்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள் விசித்திரமான உருவங்களைப் பார்க்கவும், பயமுறுத்தும் ஒலிகளைக் கேட்கவும் தொடங்கினர். இறந்த பிரிட்டிஷ் மேஜர் பேயாக அரண்மனையில் வசிக்கிறார் என்று உள்ளூர்வாசிகள் முடிவு செய்தனர். பெரிதாக மனிதர்களை அச்சுறுத்தும் சம்பவம் ஏதும் நடக்கவில்லை என்றாலும் சில அசௌகரியங்களை மக்கள் உணர்ந்துள்ளனர்.
சுதந்திரம் அடைந்தபிறகு 1970 களில், அரசாங்கம் அதை புதுப்பித்து, பிரிஜ்ராஜ் பவன் பேலஸ் ஹோட்டலாக மாற்றியது. பின்னர் மாநில விருந்தினர் மாளிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாளிகைக்கு முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி வருகை தந்து தங்கியுள்ளார்.
இதையும் படிங்க: 300 ஆண்டுகளாக கதவுகளே இல்லாத இந்திய கிராமம்..! ஒரு திருட்டு கூட இல்லையாம்!
தற்போது பேய் பாதிப்பில்லாமல் இருந்தாலும், முன்னெச்சரிக்கையாக, இந்த மாளிகையை சுற்றியுள்ள வீடுகளில் இருக்கும் மக்கள், இரவில் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், இந்த மாளிகையில் தங்Fம் விருந்தினர்கள் அரண்மனை தோட்டம் அல்லது மொட்டை மாடியில் நடப்பதைத் தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆனால் இந்த மாளிகைக்கு காவலில் இருக்கும் காவலர்கள் யாராவது தூங்கினால் அவ்வளவு தான். மேஜர் ஆவி காண்டாகி பளார் என்று அறைந்து காவலரை எழுப்பிவிடுவாராம். தனியாக அமர்ந்து காவல் செய்த காவலர்கள் பலர் இதை அனுபவித்துள்ளனர்.
அதுமட்டுமன்றி இங்கு பணிபுரியும் காவலர்கள் அடிக்கடி ஆங்கிலேயர்களின் பாணியில் ஆங்கிலத்தில் பேசும் நிகழ்வும் நடந்துள்ளது. அமைதியாக இருக்கும் வேளையில் தூங்கவோ புகைபிடிக்கவோ கூடாது என்று கட்டளையிடும் ஒரு மனிதனின் குரலும் கேட்டுள்ளது. அவர்கள் கடமையில் இருந்து விலகாமல் கட்டுப்படுத்தும் சக்தியாக அது இருக்கிறது என்று நம்புகின்றனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.