படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பது பொதுவாக நடக்கும் நிகழ்வு. குறிப்பாக 6 முதல் 15 வயது வரை படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பது இயல்பான விஷயம். அதுவும் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் இல்லை எனில் அதை பற்றி வருத்தம் கொள்ள தேவையில்லை என்கிறார் மருத்துவர் சஞ்சய் பாண்டே. இதை பெற்றோர்கள் எப்படி கையாள வேண்டும் என்கிற ஆலோசனைகளையும் வழங்குகிறார். அவரின் விரிவான விளக்கம் காண்போம்...
பெற்றோர்கள் 6 முதல் 15 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் பெட் வெட்டிங் பழக்கத்தை கண்கானிப்பது அவசியம். அதாவது இரவில் மட்டும்தான் மெத்தையை நனைக்கிறார்களா, ஒரு முறை மட்டுமே நனைக்கிறார்களா , வாரத்திற்கு ஒரு முறையா அல்லது ஒரே இரவில் பல முறை மெத்தையை நனைக்கிறார்களா அல்லது மாதத்தில் சில நாட்களா, ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதில் விளைவாக செய்கிறார்களா , வளரும் காலகட்டத்தில் இருப்பதால் இப்படி செய்கிறார்களா என கண்டறிவது அவசியம்.
அப்போதுதான் அவர்களை இதிலிருந்து வெளியேற்ற முடியும். 6 முதல் 15 வயதை கொண்ட பிள்ளைகளுக்கு பெட் வெட்டிங் பழக்கம் இருப்பின் வளர வளர இந்த பழக்கம் குறையும். ஆனால் எல்லா குழந்தைகளும் குறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
இப்படி பிள்ளைகளின் பெட் வெட்டிங் பழக்கத்தை குறைக்க அவர்களுக்கு தெரபி தேவைப்படுகிறது. குழந்தை பருவத்தில் மூளைக்கும் , சிறுநீரகத்திற்குமான தொடர்பு குறைவாகவே இருக்கும். வளர வளரதான் அதன் தொடர்பு உறுதியாகும். எனவேதான் குழந்தைகள் இரவில் தங்களை அறியாமல் சிறுநீர் கழிக்கிறார்கள். பகலில் பெற்றோர்களின் வளர்ப்பு முறை காரணமாக சிறுநீர் வந்தால் கழிவறை செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து செல்கிறார்கள். ஆனால் இரவில் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. தூங்கும்போது அந்த சமயத்தில் அவர்கள் விழிப்புடன் இருப்பதில்லை. பெரும்பாலும் இரவில் அனைவரும் தூங்கிவிடுவதால் பெற்றோர்களாலும் இதை கவனித்து கண்டிக்க இயலாது.
11, 12 முதல் 15 , 17 வயதை கடந்து டீன் ஏஜை அடையும் பிள்ளைகளுக்கு தானாகவே படுக்கையில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்னும் எண்ணம் வந்துவிடும். அதை அவமானமாக கருதுவார்கள். அவர்கள் பருவமடையும் வயதை எட்டுவதால் பாடி இமேஜ் வந்துவிடும்.
சில பெற்றோர்கள் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நோய் போல் கருதி மருத்துவரை சந்தித்து பெரும் பிரச்சனையாக பேசுகிறார்கள். இது இயல்பான விஷயம். வயது முதிர்ந்தவர்கள் கூட சில நேரங்களில் படுக்கையில் சிறுநீர் கழிக்கக் கூடும். இதுவும் இயல்பானதே. இருப்பினும் அப்படி வரும் பெற்றோருக்கு நாங்கள் சொல்வது பிள்ளைகளின் பெட் வெட்டிங் பழக்கத்தை சீராக கண்டறிய வேண்டும் என்பதுதான். அதை பொறுத்தே அவர்களுக்கு தெரபி தர முடியும்.
சில பிள்ளைகள் பகலிலும் ஆடையில் சிறுநீர் கழிக்கலாம். சில பிள்ளைகள் இரவில் மட்டும் கழிக்கலாம் இப்படி முன்பே சொன்னதுபோல் அவர்களின் பழக்கத்தை வைத்தே தெரபி தர முடியும்.
Also Read : டிஜிட்டல் தொழில் நுட்பங்களை குழந்தைகள் பயன்படுத்த அனுமதிப்பது ஆபத்தா..?
அப்படி இரவில் அதிகமாக சிறுநீர் கழிக்கிறார்கள் எனில் உணவு உண்டு படுக்கைக்கு செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன் தண்ணீர் கொடுத்துவிட வேண்டும். மாலையில் ஜூஸ் அல்லது குளிர்பானங்கள் , டீ, காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த தெரபி கைக்கொடுக்கவில்லை எனில் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தும் வசதிகளும் வந்துவிட்டன. இது மிகவும் பாதுகாப்பான முறையாகவும் உள்ளது. இதற்கான சிகிச்சைகளை சிறுநீரக மருத்துவர்களே வழங்குகின்றனர். பெற்றோர்களுக்கும் குழந்தை பருவத்தில் பெட் வெட்டிங் பழக்கம் இருந்திருந்தால் அது பிள்ளைகளுக்கும் தொடரும். இதை ஆய்வு மூலம் 45 முதல் 50% வரை பிள்ளைகளிடம் உறுதி செய்துள்ளனர். அதாவது இது மரபு ரீதியான பழக்கமாகவும் தொடரலாம்.
சிலர் 17 வயதை கடந்த பின்பும் பெட் வெட்டிங் பழக்கத்தை பின்பற்றுவார்கள். இதனாலேயே இவர்கள் வெளி இடங்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதை, இரவில் தங்குவதை தவிர்ப்பார்கள். காலேஜ் செல்லும் பிள்ளைகள் இதற்காகவே ஹாஸ்டல் செல்வதை தவிர்ப்பார்கள். சிலர் 25 வயதிற்கு பிறகும் படுக்கையில் சிறுநீர் கழிப்பதால் திருமணமே வேண்டாம் என்றெல்லாம் முடிவு செய்கிறார். இப்படி பல வழக்குகள் உள்ளன.
Also Read : மூத்த குழந்தையாக வளரும் சிக்கல்கள் என்னென்ன..? பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டியவை..!
இவர்களுக்கு இந்த பிரச்சனையை வெளிப்படையாக பேசுவதும் தயக்கமாக இருக்கும். இதனால் சிலர் தனிமைக்கே கூட சென்றுவிடுவார்கள். இவர்களுக்காக பெற்றோர்கள்தான் இந்த பிரச்சனையை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அதையும் சில பெற்றோர்கள் கவனிப்பதில்லை. எனவே இவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் இந்த சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களின் பிரச்சனையை வெளிப்படையாக பேச முன் வருவார்கள்.
இது சரி செய்யக்கூடிய பிரச்சனைதான் என்றாலும் அதை வெளியே சொல்ல தயங்குவதாலேயே வாழ்நாள் முழுவதும் தனிமையிலேயே இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். எனவே பெறோர்களாகிய நீங்கள், அவர்கள் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள் எனில் அவர்களை திட்டி அவமானத்திற்கு உள்ளாக்காமல் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் அதை வெளிப்படையாக பேச அனுமதியுங்கள். அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க முற்படுங்கள்.
அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். எதையோ நினைத்து பயப்படலாம். ஏதோ ஒரு விஷயம் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கலாம். புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மனம் தயங்கலாம். இப்படி குழந்தைகளால் சொல்ல முடியாத பல உளவியல் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். அதுவே இப்படி பெட் வெட்டிங் செய்ய காரணமாக இருக்கலாம். சில குழந்தைகளுக்கு பெட் வெட்டிங் பழக்கம் இல்லை என்றாலும் திடீரென பெட் வெட்டிங் செய்வார்கள். இப்படி படுக்கையில் சிறுநீர் கழிக்க பல காரணங்கள் உள்ளன. அதை அவர்களுடன் போதுமான நேரம் ஒதுக்கி கண்டறிய வேண்டும்.
எடுத்த எடுப்பிலேயே திட்டுவது இதற்கு தீர்வல்ல. அவர்களுக்கு தரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முயல்கிறீர்கள் எனில் அவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். பெட் வெட்டிங் என்பது உங்களுக்கு மட்டும் பிரச்சனையல்ல.. அவர்களுக்கும் அது பிரச்சனைதான். அதை பெற்றோர்களாகிய நீங்கள்தான் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kids Care, Kids Health