பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படுகின்ற வலி எவ்வளவு தீவிரம் மிகுந்தது என்பதை வார்த்தைகளால் சொல்வதைக் காட்டிலும், அதை அனுபவபூர்வமாக அனுபவிக்கின்ற ஒவ்வொரு பெண்களுக்கும் அது நன்றாகாவே தெரியும். மாதவிலக்கு ஏற்படும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வலி இருக்கிறது. ஆனால், ஒரு சிலருக்கு பல நாட்கள் வலி நீடிப்பதுடன், அன்றாட பணிகளைக் கூட செய்ய முடியாத சூழல் உருவாகிறது.
மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதற்கான சட்டத்தை ஸ்பெயின் அரசு கடந்த மாதம் இயற்றியது. இந்தச் சட்டத்தை கொண்டு வந்த முதல் ஐரோப்பிய நாடு அதுதான். மாதம் 3 நாட்கள் மாதவிலக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும், தேவைப்பட்டால் 5 நாட்களாக நீட்டித்துக் கொள்ளலாம் என்றும் ஸ்பெயின் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மாதவிலக்கு கால விடுப்பு வழங்கும் திட்டத்தை ஜப்பான் அரசு முதல் முறையாக 1947ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து தைவான், இந்தோனேசியா, தென் கொரியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் இதுபோன்ற சட்டம் அமலில் உள்ளது.
இந்தியாவில் என்ன நிலை?
மாதவிலக்கு காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் சட்டம் எதுவும் இந்தியாவில் அமலில் இல்லை. இந்த நிலையில், வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகள் சார்ந்த எத்தனையோ வழக்குகளில் சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. மத்திய அரசுதான் இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
Also Read : சர்வதேச மகளிர் தினம் 2023 : குடும்பம் - வேலை.. இரண்டையும் திறம்பட சமாளிக்க டிப்ஸ்..!
இதுகுறித்து வழக்கறிஞர் திரிபாதி கூறுகையில், “இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன். என் வீடு உள்பட வெளியுலகை பரிசீலித்து பார்க்கையில், மாதவிலக்கு தொடர்பான தயக்கம் முடிவுக்கு வர வேண்டும் என கருதுகிறேன். மாதவிலக்கு கால வலி என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்திற்கானது’’ என்று தெரிவித்தார்.
விடுப்பு கொடுத்த மாநில அரசுகள் :
1992ஆம் ஆண்டில் பெண் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 2 நாட்கள் மாதவிலக்கு கால விடுப்பு வழங்கும் திட்டத்தை பீகார் மாநில அரசு செயல்படுத்தியது. அதேபோல உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதவிலக்கு கால விடுப்பு வழங்கும் திட்டத்தை கேரள அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
வழக்கறிஞர்கள் கருத்து :
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பல்லவி பிரதாப் இதுகுறித்து கூறுகையில், “பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஆனால், இதுநாள் வரையிலும் தூய்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகள் சௌகரியமானதாக இல்லை அல்லது முற்றிலுமாக இல்லை என்பது அவர்களுக்கான தடையாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அபா சிங் கூறுகையில், “மாதவிலக்கு ஏற்படுகின்ற 3 முதல் 5 நாட்களில் பெண்களுக்கு அடிவயிறு வலி, தலைவலி, குமட்டல் மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. விடுப்பு வழங்கும் அதே சமயத்தில் வீட்டில் இருந்து பணி செய்ய சொல்வது போன்ற மாற்று வழிகளையும் பரிசீலனை செய்யலாம்’’ என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: International Women's Day, Menstrual time, Periods pain