லதாவும் ராதிகாவும் வங்கியில் பணி புரிகிறார்கள். அழகான காட்டன் சேலை அணிந்து இருவரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
வேலை முடித்து வந்ததால் சிறிது சோர்வோடு காணப்பட்டனர்.
லதா தான் துவங்கினார். டாக்டர்!!!! எங்கள் இருவருக்கும் ஒரு பிரச்சனை. இந்த பிரச்சனையால் மிகுந்த தாழ்வு மனப்பான்மையோடு நாங்கள் இருவருமே அவதிப்படுகிறோம். பல வருடங்களாக இருந்தாலும் இப்பொழுது இந்த பிரச்சனையை எப்படியாவது சரி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி எழுகிறது. இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதை பற்றி பேசுவதற்கு தான் உங்களிடத்தில் வந்தோம் என்று கூறினார்.
" சரி! லதா! என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்!!!!!" என்றேன். சிறிது தயக்கத்திற்கு பிறகு ராதிகா ஆரம்பித்தார். "டாக்டர்! கொஞ்சம் சொல்லுவதற்கு ஷையாக இருக்கிறது. எங்கள் இருவருக்குமே திருமணத்திற்காக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். . எங்களுக்கு எந்த நோயும் இல்லை.
"எனக்கு லேசான எரிச்சல் எட்டிப்பார்த்தது. பிறகு என்ன பிரச்சனை!?" என்றேன். "அதாவது டாக்டர்!! எங்கள் இருவருக்கும் மார்பகங்களின் அளவு சிறியதாக இருப்பதாக உணர்கிறோம். அதை சரி செய்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? என்ன செய்யலாம்? என்றார்.
"இதற்குத்தான் இவ்வளவு தயங்கினீர்களா? ! பலருக்கும் இருக்கும் பிரச்சனைதான் இது.
பொதுவாக அவரவர் பெற்றோர் மரபணுக்கள் வழியாகவே சில பண்புகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும். நம் உடல் அமைப்பு, நிறம், வளர்ச்சி போன்றவை அவ்வாறே அமைகின்றன. மார்பகங்களின் அளவும் அதேபோலத்தான் அமையும்.
இப்போது எதுவும் மருந்து மாத்திரைகள் ஊசிகள் எடுத்துக் கொள்ள முடியுமா?
ஹார்மோன் மாத்திரைகளை சிறிய வயதில் ஹார்மோன் குறைவானவர்களுக்கு கொடுப்போம். வளரும் வயதில் கொடுக்கும்போது அவர்களுக்கு அது ஓரளவு பலன் அளிப்பதை பார்க்கிறோம். ஆனால் 20 வயதிற்கு மேல் இந்த மாத்திரைகளை அந்த ஹார்மோன் ஊசிகள் பெரும்பாலும் பலன் அளிப்பதில்லை. மாறாக அதனுடைய பக்க விளைவுகளால் பிரச்சினைகள் வரலாம். அதனால் கொடுப்பதில்லை.
மார்பகங்கள் அமைந்துள்ள பெக்டோராலிஸ் தசையை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்யும் பொழுது ஓரளவு மார்பகங்கள் பெரிதாகும். அது போல அவரவருக்குப் பொருத்தமான உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணியும் பொழுதும் ஓரளவு சரியாகும். இப்போது உள்ளாடை களிலேயே மார்பகங்களை பெரிதாக காட்டக்கூடிய அமைப்புடன் கூடிய உள்ளாடைகள் வருகின்றன அதையும் பயன்படுத்தலாம். நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணுவதும் பலனளிக்கும்.
ஒரு சில ஊசிகள் மார்பகங்களில் செலுத்துகிறார்கள். ஆனால் அவையெல்லாமும் அந்தளவுக்கு பலன் அளிப்பதில்ல.
சில எண்ணெய்களும் க்ரீம்களையும் உபயோகப்படுத்தி மசாஜ் செய்வதன் மூலம் மார்பகங்களின் அளவை அதிகப்படுத்தலாம் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. அவற்றிலும் உண்மை இல்லை.
நிச்சயமாக பலனளிக்கக் கூடிய சிகிச்சை என்றால் அது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தான். இது முக்கியமாக மார்பகங்களில் புற்றுநோய் வந்து எடுக்கவேண்டிய சூழ்நிலை வருபவர்களுக்கு செய்யப்படுகிறது .
இந்த சிகிச்சையில் சிலிக்கான் இம்ப்ளாண்ட் எனப்படும் பொருளை மார்பகங்களில் வைத்து பெரிதாக்குகிறது .
மேலும் அருகில் உள்ள தசைப் பகுதி மற்றும் தோலை நகர்த்தி ஆபரேஷன் செய்தும் மார்புகளின் அளவு கூட்டப்படுகிறது . இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளும் தான் ஓரளவு நல்ல பலனைக் கொடுக்கின்றன.
ஆனால் திருமணம், கர்ப்பம், குழந்தை பிறப்பது போன்றவற்றை முடித்தவர்களுக்கு தான் இந்த அறுவை சிகிச்சைகளை செய்கிறோம். இல்லை என்றால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை பிறப்பு போன்றவை மார்பகங்களில் மாறுதல்கள் ஏற்படுத்தும் போது பிரச்சனைகள் வரலாம்.
"புரிந்தது டாக்டர் !! இந்த உடற்பயிற்சிகளை செய்ய துவங்குகிறேன். எனக்கு ஏற்ற சரியான உள்ளாடையை தேர்வு செய்து அணிந்து கொள்கிறேன். இதன் மூலம் ஓரளவு சரி செய்ய முடியும் என்று நம்புகிறேன். உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி!" என்று கூறி விடை பெற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breast Care, Breast changes, Marriage, பெண்குயின் கார்னர்