இன்றைக்கு திடீரென ஒருவருக்கு மரணம் ஏற்பட்டாலே அதற்குக் காரணம் மாரடைப்பாகத் தான் இருக்கிறது. ஆம் சமீப காலங்களாகவே இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பு, மூளை பக்கவாதம், பெருந்தமனி நோய்கள், இதயத்தின் ரத்தக் குழாய்களில் ஏற்படுகிற கார்டியோ வாஸ்குலர் நோய் தாக்கத்தினால் தான் உயிரிழக்கின்றனர். முதலில் கார்டியோ வாஸ்குலர் நோய் என்றால் என்ன? என்பது குறித்தும் யாரை அதிகமாக இது பாதிப்படையச் செய்கிறது? என்பது குறித்து இங்கே பார்ப்போம்..
கார்டியோ வாஸ்குலர் நோய்கள் :
இதயத்தையும், இதயத்திற்குச் செல்லும் ரத்தக்குழாய்களையும் பாதிக்கும் நிலையாக உள்ளது தான் கார்டியோ வாஸ்குலர் நோய்கள். உயர் இரத்த அழுத்தத்தினால் இதுப்போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஏற்பட்டு மரணம் வரை நம்மை இட்டுச்செல்கிறது. மேலும் உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி, இதய நோயினால் ஒரு ஆண்டுக்கு மட்டும் கிட்டத்தட்ட 18.6 மில்லியன் பேர் உயிரிழக்கிறார்கள் என்றும், இதில் 33 சதவீதம் பேர் கார்டியோ வாஸ்குலர் நோயினால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவிற்கு உள்ளது. மேற்கத்திய நாடுகளின் மக்கள் தொகையை விட 10 ஆண்டுகளுக்கு முன்பே இதய நோய்கள் இந்தியர்களைத் தாக்கியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. குறிப்பாக 1990ல் 23.2 மில்லியனாக இருந்த இறப்பு விகிதம் 2010ல் 37 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பல மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஆண்களைப் பாதிக்கும் கார்டியோ வாஸ்குலர் நோய்கள்
உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி, ஒவ்வொரு ஆண்டும் இதய நோய்களின் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக பெண்களை விட ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. மேலும், ஆண்களுக்கு ஆரம்ப காலத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். ஆண்களில் மாரடைப்புக்கான சராசரி வயது 66 ஆகவும், பெண்களுக்கு 70 ஆகவும் இருப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. மற்றொரு ஆய்வில், திடீர் இதய நோய்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை பெண்களை விட ஆண்களுக்கு மூன்று முதல் நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
Also Read : எப்போதும் கோபம், எரிச்சலா இருக்கா..? இந்த விஷயங்கள் காரணங்களாக இருக்கலாம்..!
மேலும், அனைத்து திடீர் இதய நோய்கள் கிட்டத்தட்ட 75% ஆண்களுக்கு ஏற்படுகிறது என்கிறது ஆய்வு. அதே சமயம் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி இருக்கும் வரை, பெண்களுக்கு மாரடைப்புக்கு எதிராக ஹார்மோன் பாதுகாப்பாக உள்ளது. ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை புகைப்பிடிக்கும் பழக்கம், மன அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்றவை மாரடைப்பு நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் போன்றவை கார்டியோ வாஸ்குலர் நோய்களுக்கான முக்கியக் காரணங்களாக அமைகின்றன. இதனால் தான் பெண்களை விட ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
குறிப்பாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஆண்களுக்கு, அந்த புகையில் உள்ள கார்பன் மோனாக்சைடு இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவைக்குறைக்கிறது. இதனால் இதயத்திற்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவை பராமரிப்பது கடினமாக உள்ளது. மேலும் புகையிலை நிகோடின் அட்ரினலின் உற்பத்தியை அதிகரித்து இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதோடு இரத்த ஒட்டமும் தடைப்படுவதால் இதயத்திற்கு அழுத்தம் அதிகரிக்கிறது.
அதிகரிக்கும் உடல் பருமன் :
கார்டியோ வாஸ்குலர் நோய் பாதிப்பிற்கு மற்றொரு முக்கியக் காரணம் உடல் பருமன். அதிலும் ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் ஆண்களுக்கு உடல்பருமன் பிரச்சனை அதிகமாகிறது. அடிவயிற்றில் சேரும் அதிகப்படியான கொழுப்புகள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் அதிகரிக்கும் உடல் பருமனால் பல நோய் பாதிப்புகளையும் நாம் சந்திக்க நேரிடுகிறது. பொதுவாக இந்திய ஆண்களின் அதிகரித்து வரும் உட்கார்ந்த வாழ்க்கை முறையிலிருந்து அவர்களின் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் வரை அனைத்தும் உடல் பருமன் அதிகரிப்பதற்கும், அதையொட்டி மாரடைப்பு பிரச்சனைகள் ஏற்படவும் வழிவகுக்கிறது. எனவே தான் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.