நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மனம் விட்டு பேசுதல், தனக்கென நேரம் ஒதுக்குதல், மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றை உங்களது வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலே மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சந்தோஷத்தை நிச்சயம் பெற முடியும்.
“மனநலம் சாதாரண விஷயமல்ல“.. நமது உடல் நலத்திலிருந்து பிரிக்க முடியாத ஒரு செயலாகும். ஒருவரின் வாழ்க்கை நிம்மதியாக நடத்தி செல்ல உதவுவது அவர்களின் மனநிலை தான். ஆனால் மன ஆரோக்கியம் என்பது தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. அதிலும் கொரோனா பெருந்தொற்றிற்குப் பிறகு வேலையின்மை, பொருளாதார நெருக்கடி என பல சூழல்களிலிருந்து எப்படி தப்பிப்பது? என்ற கேள்வியே பலரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிட்டது. தொற்று நோயின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், உடல் ஆரோக்கியத்தைத் தவிர கடுமையாகப் பாதிக்கப்பட்டது நமது மன ஆரோக்கியம் தான். என்ன தான் மனதை ஒருநிலைப்படுத்த முயற்சித்தாலும் முடியாத நேரத்தில் தான் மன நல மருத்துவர்களை நாம் சந்திக்க நேரிடுகிறது.
எனவே இந்நேரத்தில் உங்களது மனநிலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இன்றைய நாளில் நாமும் தெரிந்துக் கொள்வோம்.
Also Read : அதிகமாக ஷாப்பிங் செய்வது ஒருவித மனநோய் : விவரிக்கிறார் மனநல மருத்துவர்!
மனநிலையை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்கான வழிமுறைகள்:
எழுத பழகுங்கள்:
யாரிடம் சொல்ல முடியாத பல விஷயங்களை மனதில் வைத்திருக்கும் போது தான், மன அழுத்தம் அதிகளவில் ஏற்படுகிறது. இதுப்போன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் யாரிடம் சொல்வதற்குப் பதிலாக உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ? அதை டைரியாக எழுத பழகுங்கள். சந்தோஷமாக இருந்தாலும் சரி, வருத்தமாக இருந்தாலும் என்ன தோன்றுகிறதோ? அதை எழுதுங்கள். உங்களுக்கே இது மன நிம்மதியைக் கொடுக்கும். மன அழுத்தம் இல்லாத நேரத்திலும் இதை நீங்கள் தொடரும் போது நிச்சயம் நல்ல பலனளிக்கும்.
உடற்பயிற்சி மற்றும் இயற்கையுடன் நேரத்தை செலவிடுதல்:
நாள் முழுவதும் வீட்டில் அல்லது அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் பலருக்கும் மன அழுத்தம் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கக்கூடும். இந்நேரத்தில் யாருக்கும் உங்களுக்கு உதவ முடியாது. எனவே நீங்களே மனநிம்மதிக்கான வழியைத் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நேரம் கிடைக்கும் போது உடற்பயிற்சி செய்ய பழகுங்கள். இதோடு தோட்டத்தில் சிறிய சிறிய வேலைகளை செய்வதன் மூலம் உங்களை ரிலாஸ் செய்து கொள்ளலாம்.
Also Read : இரவில் தூங்காமல் இருப்பதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?
தூக்கம் :
மன அழுத்தம் குறைய நன்றாக தூங்க வேண்டும். இரவு தூங்க செல்வதற்கு முன்னர், 30 நிமிடங்களுக்கு முன்பாகவே மொபைல் டிவி அல்லது லேப்டாப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
உணவு :
உடல் பிரச்சனையின் போது மன அழுத்தம் ஏற்படும் என்பதால் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். அதிகப்படியான ஜங்க் ஃபுட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 10 நிமிட தியானத்தை உங்களது வாழ்க்கையில் தினசரி செயல்பாடாக வைத்துக் கொள்ள வேண்டும். இது உங்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நேரம் கிடைக்கும் போது பேசுவதற்கு முயற்சி செய்யுங்கள். நிச்சயம் மனம் விட்டு பேசும் போது உங்களின் மனநிலை மாறக்கூடும்.
இதுபோன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொண்டாலும், தூக்கமின்மை, மனச்சோர்வு ஏற்பட்டாலும் உடனடியாக மன நல மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது சிறந்த வழியாக அமையும். உலக அளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5% பேர் மனச்சோர்வு பாதிக்கப்படுவதாகவும் அதேபோல், 8 பேரில் ஒருவர் மனநல பிரச்னைகளை எதிர்கொள்வதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.