புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். உடல் செயல்பாடு அதிகம் உள்ளவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவது மிக மிக குறைவு என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விறுவிறுபான நடைபயிற்சி, புற்களை வெட்டுதல், நடுத்தர வேகத்தில் நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல், யோகா செய்தல் ஆகியவற்றை நாள்தோறும் ஒருமணி நேரம் அல்லது குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது செய்து வந்தால், அவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது மிக மிக குறைவு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
யோகாசனத்தை பொறுத்தவரையில் உடற்பயிற்சியாக இருப்பது மட்டுமல்லாது, மன அமைதிக்கும் வழிவகுக்கிறது. மன ஆரோக்கியம் இருந்தாலே பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம். அந்தவகையில் அன்றாட நாம் செய்ய வேண்டிய 3 யோகாசனங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
1. கோமுகாசானம்
கோமுகாசனம், ஹதா யோகாவின் (Hatha Yoga) ஒரு பகுதியாகும். மடிந்த கால்மீது இன்னொரு மடித்த காலை வைத்து அமரும்போது பார்த்தால், ஒருவரின் தோற்றம் பசுவின் முகத்தை போல் காட்சியளிக்கும். அதனால் இந்த ஆசனத்தை கோமுகாசனம் என அழைக்கப்படுகிறது. ஒருவருக்குள் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும், உடல் தசைகளுக்கு நெகிழ்வு தன்மையை (stretch) கொடுக்கவும் கோமுகாசனம் உதவுகிறது.கால் வலிமையை ஏற்படுத்தி மூட்டு வலிகள் ஏற்படாமல் தடுப்பதுடன், முதுகையும் வலுப்படுத்துகிறது.
செய்முறை :
தரையில் விரிப்பில் அமர்ந்து வலது முழங்காலை மடித்து குதிங்கால் இடது பின்புறம் அருகே வரும்படியாக கொண்டு வரவேண்டும். அதேபோல் இடது காலை வலது முழங்கால் மேல்தூக்கி வைத்து மடித்து தன் பின்புறம் படும்படியாக ஒட்டி வைக்க வேண்டும். பின்னர், வலது கையை வலது தோள்புறமாக மேலிருந்து கீழ்நோக்கியும், இடது கையை பின்புறமாக கொண்டு வந்து வலது கையினை பிடித்து கொள்ள வேண்டும். உடலினை நேராக வைத்திருக்க வேண்டும். மெதுவாக சுவாசிக்க வேண்டும். இந்த நிலையில் 30 நொடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இருக்கலாம்.
2. நாகாசனம்
உடலின் பல பிரச்சனைகளை போக்குவதற்கு நாகாசனம் உதவுகிறது. மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமல்லாது, இடுப்பு, அடிவயிறு, கால் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யவும் நாகாசனம் காரணமாக உள்ளது. தொப்பையைக் குறைப்பதற்கும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்கும் மிகச்சிறந்த உடற் பயிற்சியாகவும் இருக்கிறது. இந்த பயிற்சியை நாள்தோறும் செய்து வந்தால் கை, தொடை, தோள்பட்டைகளின் தசை பகுதிகளின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதுடன், செரிமான கோளாறுகளால் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கி, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
செய்முறை
இந்த ஆசனத்திற்கு முதலில் தரையில் போடப்பட்டுள்ள வரிப்பின் மீது படுத்துக்கொள்ளுங்கள். மூச்சை உள்ளிழுத்தவாறு மேல் உடலையும், கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். முடிந்த வரை 45 டிகிரி கோணத்தில் உடலைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். பின்னர், கைகளையும் உயர்த்திக்கொள்ளுங்கள். இந்நிலையில் 5 முதல் 10 நொடிகள் வரை இருந்து, பின் மூச்சை வெளியே விட்டவாறு பழைய நிலைக்கு திரும்புங்கள்.
Spicy Food : உணவில் அதிகமாக காரம் சேர்த்துக்கொண்டால் வரும் பிரச்சனைகளை பற்றி தெரியுமா..?
3.புஜங்காசானம்
பாம்பு படமெடுப்பதுபோல் உங்கள் உடலை வளைப்பது புஜங்காசனம் என கூறப்படுகிறது. முதுகு தண்டுவடம், மார்பு, அடிவயிறு, தோள்பட்டை, நுரையீரல்களின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன், உடலில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கவும் இந்த யோகாசனம் பயன்படுகிறது. ஆஸ்துமா நோயாளிகள் செய்ய வேண்டிய ஆசனமாகும்.
செய்முறை
தரை விரிப்பில் குப்புற படுத்துக்கொள்ளுங்கள். கைகள் இரண்டையும் முன்பக்கத்தில் வைத்துக்கொண்டு மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளுங்கள். பின்னர், கைகளை நிலத்தில் ஊன்றி உங்களின் உடலை முடிந்த அளவு பாம்பைப்போல் வளையுங்கள். இப்போது மூச்சை வெளியே விட்டு 15 நொடிகள் வரை உங்களின் உடலை பேலன்ஸ் செய்து இருங்கள். 15 நொடிகளுக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்புங்கள். 5 முறை இதனை செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.