திருப்பதி என்றாலே பெருமாளும் லட்டும்தான் முதலில் நினைவுக்கு வரும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை பலருக்கும் பிடித்தமான கோயில் பிரசாதம் என்றாலும் அது திருப்பதி லட்டுதான். இந்த திருப்பதி லட்டு திருப்பதி திருமலையில் மட்டுமே கிடைக்கும். வேறு எங்கும் இந்த லட்டு கிடைக்காது. கடைகளில் விற்கவும் அனுமதி கிடையாது. அந்த பெயரைக் கூட யாரும் பயன்படுத்த முடியாது. அந்த அளவுக்குத் திருப்பதி லட்டு பல பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றது.
திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன் சூப்பரான சுவைக்குக் கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கற்கண்டு, நெய், பக்குவம் ஆகியவற்றைத் தாண்டிப் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். திருப்பதியில், லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது 3 நூற்றாண்டுகளைக் கடந்து தொடர்கிறது. இங்கு 3 வகையான லட்டுகள் செய்யப்படுகின்றன. ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோகிதம் லட்டு ஆகினவாகும்.
இதில் பக்தர்களுக்கு வழங்கப்படுவது புரோகிதம் லட்டு. திருப்பதி லட்டு உருண்டையின் அளவும், நறுமணத்தையும் வேறு எங்கும் பார்க்க முடியாது. உலகின் வேறு எந்த இடத்திலும் இதுபோல் தயாரிக்கப்படுவதும் இல்லை. இதன் தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை என குறிப்பிட்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு மற்றும் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே கடைகளில் வாங்கி திருப்பதி லட்டு சாப்பிடுவது என்பது கடினமான ஒன்று. ஆனால் நீங்கள் நினைத்தால் வீட்டிலேயே செய்யலாம். இந்த பதிவில் திருப்பதி லட்டுவை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கடலைமாவு - 250 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
பால் - 100 மிலி
முந்திரி - 25 கிராம்
உலர் திராட்சை - 25 கிராம்
கிராம்பு - 10
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - சிறிதளவு
பச்சை கற்பூரம் - சிறிதளவு
கற்கண்டு - 25 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – 2-3 டீஸ்பூன்
செய்முறை
1. முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் சர்க்கரை சேர்த்து 250 மிலி தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்யவும்.
2. வழக்கமான சர்க்கரை பாகு போல் கெட்டியாக இல்லாமல் தண்ணீரில் சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
3. அடுத்து, கடலை மாவுடன் பால் மற்றும் 250 மிலி தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைத்து தயார் செய்து கொள்ள வேண்டும்.
3. இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்பு, கடாயின் மேல் சல்லடை வைத்துக் கரைத்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பூந்தி போட்டுக் கொள்ளவும்.
4. நன்கு பொன்னிறமாக பூந்தியைப் பொரித்து, உடையாமல் எடுத்துக் கொள்ளவும்.
5. பின்பு இந்த பூந்தியைக் சர்க்கரை பாகில் உடனே சேர்க்கவும்.
இப்போது கடாயில் இருக்கும் எண்ணெயில் முந்திரி, கிராம்பு, திராட்சை ஆகியவற்றை போட்டு, பொரித்து எடுத்து பூந்தியுடன் சேர்க்கவும்.
6.அடுத்து, ஏலக்காய் பொடி, கற்கண்டு, ஜாதிக்காய் பொடி, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் ஆகியவற்றை சர்க்கரை பாகில் இருக்கும் பூந்தியுடன் சேர்த்து 45 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும்.
7. இப்போது பூந்தி, சர்க்கரை பாகில் நன்கு ஊறி, மேலே பொங்கி வந்து இருக்கும்.
8. இதனுடன் உருக்கிய நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உருண்டை பிடிக்க வேண்டும்.
9. இப்போது உங்களுக்கு விருப்பமான அளவில் பூந்தியைப் பக்குவமாய் எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
அவ்வளவு தான் திருப்பதி லட்டு ரெடி.
10. வீட்டில் விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் இந்தச் ரெசிபியை பின்பற்றி திருப்பதி லட்டு செய்து பாருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Sweet recipes, Tirumala Tirupati, Tirupati, Tirupati laddu