சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் யாராக இருப்பினும் உடல் சோர்வு என்பது பொதுவான பிரச்சனை தான். நாள் முழுவதும் விளையாடுகின்ற சிறார்கள் அல்லது நாள் முழுவதும் அலுவலகத்தில் பணி செய்து களைப்பு தட்டும் பெரியவர்கள் என எல்லோருக்கும் உடல் சோர்வு வரும்.
குறிப்பாக, இரைச்சல் மிகுந்த இன்றைய மாநகர சாலைகளில் பயணித்தாலே போதுமானது. உடல் சோர்வு நம்மை தேடி வந்துவிடும். பகல் நேரத்தில் ஒரு குட்டித் தூக்கம் மற்றும் இரவு முழுமையான ஆழ்ந்த உறக்கம் ஆகியவை உடல் சோர்வை போக்கி நமக்கு புத்துணர்ச்சியை தருகிறது. ஆனாலும், சிலருக்கு உடல் சோர்வு நிரந்தரமானதாக இருக்கிறது.
நம் நண்பர்கள் கூட நம்மை பார்த்து தூங்கமூஞ்சி என்று சொல்லும் அளவுக்கு, நம் உடல் எப்போதும் களைப்பாக தென்படும். எப்போதாவது மிக அதிகப்படியான வேளைப்பளு காரணமாக மிகுந்த உடல்சோர்வு ஏற்படுவது இயல்பானதே. ஆனால், தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக அல்லது 6 மாதங்களுக்கு மேலாக உடல்சோர்வு நீடிக்கிறது என்றால், நம் உடல்நலன் குறித்து நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்.
உணவுக்கும் தொடர்பு
அதிகப்படியான வேளைப்பளு மட்டுமே உடல்சோர்வுக்கு முழு காரணம் என்று சொல்லிவிட முடியாது. நாம் உண்ணும் உணவு முறைக்கும் கூட இதனுடன் தொடர்பு உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல்சோர்வு ஏற்படும். குறிப்பாக இரும்புச்சத்து பற்றாக்குறை காரணமாக இத்தகைய நாம் சோம்பேறியாக மாறிவிடுவோம்.
உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதை எப்படி கண்டறிவது..? அறிகுறிகளும்... சரி செய்யும் வழிகளும்...
ஊட்டச்சத்து குறைபாடு ஏன் ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சத்தான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளாமல் நிறையூட்டப்பட்ட சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள், குளிர்பானங்கள் போன்றவற்றை நாம் எடுத்துக் கொள்வதால் தான் போதுமான சத்து கிடைக்காமல் போய்விடுகிறது.
உணவில் புரதம் சேர்க்க வேண்டும்
நம் உடலுக்கு வலு கொடுக்கக் கூடியது மற்றும் தசை இழப்பை சரி செய்யக் கூடியது புரதம் ஆகும். ஒவ்வொரு நாளும் நமக்கு தேவைபடும் தசை வலிமையை கொடுப்பது புரதச்சத்து தான். இறைச்சி, மீன், முட்டை, பருப்புகள், கொண்டக்கடலை போன்றவற்றில் புரதச்சத்து மிகுதியாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவை எடுத்துக் கொள்ளலாம்.
நீர்ச்சத்து அவசியமானது
மனமும், சுவையும் இல்லாத சாதாரண தண்ணீரில் என்ன சத்து இருந்துவிடப் போகிறது என்று நீங்கள் ஆச்சரியம் அடையக் கூடும். ஆனால், நீர்ச்சத்து பற்றாக்குறை தான் உடல்சோர்வுக்கு மிக முக்கிய காரணம் ஆகும். குறிப்பாக, நீர்ச்சத்து இல்லை என்றால் தலைச்சுற்றல், கவலை போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும்.
காஃபி கூடாது
சோம்பலாக உணரும் தருணங்களில் ஒரு கப் சூடான காஃபி அருந்துவது நமக்கு பிடித்தமான விஷயம் தான். ஆனால், அதிகப்படியாக டீ, காஃபி அருந்துவதால் நாளடைவில் நம் உடல் சோர்வு அடையக் கூடும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் கிடைக்கும் சுறுசுறுப்பு என்பது தற்காலிகம் மட்டுமே.
மது அருந்தக் கூடாது
மது அருந்தும் சமயத்தில் குதூகலத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால், உடலுக்கு அது கொண்டு வந்து சேர்க்கும் பலவகை தீங்குகளில் இந்த உடல் சோர்வும் ஒன்று. உடலில் கொழுப்பு, சர்க்கரை போன்றவை அதிகரிக்கவும் மது காரணமாக அமைகிறது. ஆகவே, இதை குறைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல புகைப்பிடிப்பதையும் நிறுத்த வேண்டும்.
நன்றாக சாப்பிடவும்
சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சாப்பிடுவது மட்டுமல்லாமல் ஆழ்ந்த உறக்கம் கட்டாயம் தேவை. உங்கள் வயது, பாலினம் மற்றும் உடல்வாகு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிந்து வைத்திருப்பது அவசியம். தினசரி உடற்பயிற்சி செய்வது நன்மை தரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fatigue syndrome, Nutrition Deficiency, Nutrition food