தீபாவளிக்கு செய்யும் இனிப்பு வகைகளில் பாதுஷா பலருக்கும் பிடித்த ஸ்வீட். இதை பலரும் கடையில் வாங்கி பூஜை செய்து பகிர்ந்து கொடுப்பார்கள். ஆனால் கடையில் வாங்குவதைக் காட்டிலும் உங்கள் கை பக்குவத்தில் அன்பு கலந்து செய்யும்போது அதன் சுவை இன்னும் கூடும். எனவே இந்த முறை வீட்டிலேயே செய்து பாருங்கள். ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள் :
மைதா - 1 1/2 கப்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
உப்பு - சிட்டிகை
நெய் - 1/4 கப்
தண்ணீர் - 1/4 கப்
எண்ணெய் - வறுக்க
சர்க்கரை சிரப்பு செய்ய :
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் மைதா பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். பின் நெய் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
அடுத்ததாக தண்ணீரை தெளித்தவாறு ஊற்றி பிசைந்துகொள்ளுங்கள். மாவு மென்மையான பதத்திற்கு வரும் வரை பிசைந்துகொள்ளுங்கள்.
பின் அதை 30 நிமிடங்கள் ஈரத்துணி போட்டு மூடி ஊற வையுங்கள்.
குங்குமப்பூவை தண்ணீரில் ஊற வைத்துவிடுங்கள்.
வாயில் வைத்தாலே கரைவது போன்ற சுவையான அதிரசம் செய்ய தெரியுமா..? இந்த தீபாவளிக்கு செய்து பாருங்க..
அதற்குள் சர்க்கரை பாகு தயாரித்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி பின் சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு கொதிக்க வையுங்கள்.
இறுதியாக குங்குமப்பூ தண்ணீர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக்கொள்ளுங்கள்.
தண்ணீர் இறுகி கெட்டியாக வர வேண்டும். பாகு கையில் தொட்டால் ஒட்ட வேண்டும். இந்த பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
தற்போது பிசைந்த மாவை மீண்டும் ஒரு முறை பிசைந்துவிட்டு மாவை கசக்கி பின் தட்டையாக தட்டுங்கள். இறுதியாக நடுவே ஒரு ஆள் காட்டி விரலால் ஒரு ஓட்டை போடுங்கள்.
இப்படி எலுமிச்சை அளவுக்கு மாவு எடுத்து கசக்கி தட்டையாக தட்டுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி தட்டிய மாவை எண்ணெய் காய்ந்ததும் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுங்கள். தீ மிதமாக இருக்கட்டும். இல்லையெனில் கருகிவிடும்.
மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்தால் மொறுமொறுவென மிருதுவாக இருக்கும்.
அதை அப்படியே எடுத்து சர்க்கரை சிரப்பில் மூழ்க வையுங்கள்.
5 - 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் பாதுஷாவை எடுத்துவிடுங்கள். அவ்வளவுதான் பாதுஷா தயார்.