இன்று பலருக்கும் முடி சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து விட்டது. பள்ளி செல்லும் மாணவர்களின் தலைமுடியில் கூட வெள்ளை முடிகளை நாம் பார்க்கும் நிகழ்வு பொதுவாகிவிட்டது. சிலருக்கு 25 வயது தாண்டுவதற்குள்ளாகவே முடி முழுவதும் கொட்டி வழுக்கை தலையுடன் காட்சி தருகின்றனர். இப்படி பல்வேறு முடி பிரச்சனைகள் பலருக்கு மனஅழுத்தம் ஏற்படவும் காரணமாகின்றன.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள கிளினிக் ஒன்றில் ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் சிகிச்சை செய்து கொண்ட 30 வயது இளைஞர் ஒருவர் மருத்துவரின் அலட்சியம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் பெயர் அதர் ரஷீத். இவருக்கு வழுக்கை பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. எனவே இழந்த தனது முடி அழகை திரும்ப பெரும் முயற்சியின் ஒருபகுதியாக ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் சிகிச்சையை ஆசையுடன் செய்து கொண்டவர் கடைசியில் பரிதாபமாக உயிரையே விட்டுள்ளார். இவர் செய்து கொண்ட முடி மாற்று சிகிச்சையின் காரணமாக அவரது உடலின் பல உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்து, இறுதியில் மரணித்து உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
முடி மாற்று சிகிச்சை செய்து கொண்டதால் ஏற்பட்ட இந்த மரணம் தொடர்பாக ரஷீத்தின் குடும்பத்தினர் காவல் துறையை அணுகி புகார் அளித்தனர். இந்த புகாரையடுத்து போலீசார் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த இருவர் உட்பட 4 பேரை கைது செய்து உள்ளனர். ரஷீத் தனது தாய் மற்றும் 2 சகோதரிகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் தனது குடும்பத்திற்கு வருமானம் ஈட்டி தரும் ஒரே முக்கிய நபராகவும் இருந்துள்ளார். தனது குடும்பத்திற்கு ஒரே ஆதாரமாக இருந்த ரஷீத் சொந்தமாக ஒரு வீடு கட்டியதோடு மட்டுமின்றி அவரது இரண்டு சகோதரிகளுக்கு திருமணமும் செய்து வைத்தார். சகோதரிகளை கட்டி கொடுத்து முக்கிய கடமையை முடித்ததை தொடர்ந்து தனக்கான ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்து கொள்ள விரும்பி இருக்கிறார்.
Read More : ஆண்களே உங்கள் சரும பராமரிப்பில் இந்த 5 தவறுகளை செய்யவே செய்யாதீங்க.!
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ரஷீத்தின் தாய் ஆசியா பேகம், முடி மாற்று அறுவை சிகிச்சையால் தனது மகன் மிகவும் வேதனையை அனுபவித்து மரணம் அடைந்ததாக கூறி இருக்கிறார். முடிமாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ரஷீத்தின் உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்பட்டன. பின் அவரது சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் அவரது உடலின் பல உறுப்புகள் செயலிழந்து வலிமிகுந்த மரணம் ரஷீத்திற்கு ஏற்பட்டதாக அவரது தாயார் ஆசியா பேகம் வேதனை தெரிவித்தார். முடி மாற்று அறுவை சிகிச்சையின் முடிவுகள் தவறாக போக கூடும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவே காவல்துறையில் புகார் அளித்ததாக ஆசியா பேகம் கூறி இருக்கிறார். தன்னை போல இனி வேறு எந்த தாயும் மகனை இழப்பதை நான் விரும்பவில்லை . முடி மாற்று அறுவை சிகிச்சை ஒரு மோசடி நடைமுறை என்றும் ரஷீத்தின் தாய் தாய் ஆசியா பேகம் கூறி இருக்கிறார்.
ஒரு திறமையான அறுவை சிகிச்சை நிபுணரால் செய்யப்படும்போது, முடி மாற்று அறுவை சிகிச்சையானது வாழ்க்கையை மாற்றும் மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் அனுபவமாக இருக்கும். ஆனால் முறையாக பயிற்சி பெறாத நபர்களால் நடத்தப்படும் கிளினிக்குகளுக்கு செல்வது மோசமான அனுபவங்களையே தரும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதே போல முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ய குறைந்தபட்சம் ரூ.3.5 லட்சம் வரை செலவாகும். சிகிச்சைக்கு 8-9 மணி நேரங்கள் வரை தேவைப்படும். விலை குறைவாக ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் செய்யப்படும் என்று செய்யப்படும் விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம். ஏனென்றால் ரஷீத் விஷயத்தில் இதுதான் நடந்துள்ளது. குறைவான செலவில் ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் என்ற விளம்பரத்தை நம்பி சென்றதன் விளைவே அவரது உயிர் பறிபோக காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Hair care, Hair Care Mistakes