கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அன்னயப்பா(70), இவரது மகன் சேகர் (எ) சென்னப்பா(35), அன்னயப்பாவின் தம்பி கிருஷ்ணப்பா, இவரது மகன் விஜய்(25), விஜய்யின் மனைவி மது, இவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு விஜய்யின் மனைவி மது, அன்னயப்பாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சென்னப்பா, தனது தந்தையை எப்படி திட்டலாம் என மதுவிடம் சண்டையிட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து மது தனது கணவர் விஜய்க்கு தகவல் அளித்துள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த விஜய் தனது நண்பர்களோடு வீட்டுக்கு சென்று மனைவியை திட்டிய சென்னப்பாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சென்னப்பாவை தனது பெரியப்பா மகன் அண்ணன் என்று கூட பார்க்காமல் விஜய் கத்தியால் குத்தியுள்ளார். இதில் குடல் சரிந்த நிலையில் சென்னப்பா மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்திலே அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னப்பாவின் உடல் ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பேகேப்பள்ளியில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், தனது மகனை, தனது தம்பியின் மகன் குத்தி கொலை செய்ததால் வேதனையில் இருந்த அன்னயப்பா துக்கம் தாங்காமல் வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டின் முன்பு தந்தை, மகன் இருவரது உடல்களையும் மலர்களால் அலங்கரித்த உறவினர்கள் இருவரது உடல்களையும பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் வாழும் அனைவரையும் கண் கலங்க செய்தது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி விஜய் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : செல்வா - ஓசூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Krishnagiri, Local News