முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் அடித்து கொலை - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் அடித்து கொலை - நடந்தது என்ன?

உயிரிழந்த பிரபு

உயிரிழந்த பிரபு

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜனஹள்ளி அருகே ராணுவ வீரர் பிரபு என்பவர் வார்டு கவுன்சிலரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகர்  பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (50). இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான பிரபாகரன்(30), பிரபு(29), இருவரும் இந்திய இராணுவத்துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாகரனின் மனைவி பிரியா தெருவில் உள்ள ஊராட்சி பொது தண்ணீர் தொட்டியின் முன்பு துணி துவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை பார்த்த  கவுன்சிலர் சின்னசாமி இது பொது தண்ணீர் தொட்டி இதில் துணி துவைக்க கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அருகிலிருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.

பிரபாகரன் கவுன்சிலர் சின்னசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பேரூராட்சி உறுப்பினர் சின்னசாமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று ராணுவ வீரர்கள் பிரபு அவரது அண்ணன் மற்றோரு ராணுவவீரர் பிரபாகரன், தாயார் கண்ணம்மாள், தந்தை மாதையன், ஆகிய நான்கு பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பலத்த காயமடைந்த பிரபு கடந்த 14 ஆம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து முதலில் அடிதடி வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்திய நாகரசம்பட்டி போலீசார் தற்போது அதை கொலை வழக்காக பதிவு செய்து தகராறு சம்மந்தமாக சின்னசாமி, குருமூர்த்தி, மாதையன், மணிகண்டன், வேடியப்பன், ராஜபாண்டி, குணாநிதி, காளியப்பன், புலிபாண்டி ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: 10000 பெண்களின் குளியல் வீடியோ.. 30 ஆண்டுகளாக ரகசிய கேமரா.. ஜப்பானை அதிர வைத்த சம்பவம்!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் ராணுவ வீரர் கொலை சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை, தாக்கியவர்கள், காயம் அடைந்தவர்கள், உயிரிழந்த ராணுவ வீரர், அனைவரும் மிக நெருங்கிய உறவினர்கள், சாதாரண அடிதடி சம்பவம் கொலை வழக்காக மாறி உள்ளது.

இதனை சில அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், இந்த சம்பவத்தை திட்டமிட்டு கொலை என அரசியல் கண்ணோட்டத்தோடு சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்து வருகின்றனர். அப்படி பரப்புரை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த கொலை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இவரது அறிவிப்பையடுத்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் வேலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள பாஜக கட்சி 200 -க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே கொலையான ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

First published:

Tags: Annamalai, Army man, Army Man Killed, Crime News, Krishnagiri