பொதுப் பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது வருவாய்த் துறையினர், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் கண்முன்னே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த பெண்ணால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்திற்குட்பட்ட கருங்கல்பட்டி குடி தெருவை சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் செல்வம். இவர்களுக்கு சொந்தமான வீட்டுமனையில் நடைபாதை இல்லை என்று சுமதி, அண்ணாவி, நாகராஜ், பாப்பாத்தி, இளையராஜா ஆகிய நபர்கள் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததாகவும், சமீபத்தில் நடைபாதையை அடைத்து விட்டதாகவும், பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று கூறி குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையம் ஆகிய இடங்களில் மனு கொடுத்துள்ளனர்.
நான்கு ஆண்டுகளாக நடைபாதை பிரச்சனை நிலவி வரும் நிலையில், பிரச்சனைக்கு இதுவரை உரிய தீர்வு காணவில்லை என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், கூட்ட அரங்கிற்குள் மனு அளிக்க வந்த சாந்தி, திடீரென்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கண் முன்னே தனது சேலைக்குள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து, தலையில் ஊற்றிக் கொண்டார்.
அப்போது பணியில் இருந்த அதிகாரிகள், காவலர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர். இந்த செயலால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.