ரூ.3 கோடி பண மோசடி புகாரில் கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரும், பைனான்சியருமான அன்புநாதனுக்கும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த பிரகாஷ் என்ற நபருக்கும் கடந்த பல ஆண்டுகளாக பண பரிமாற்றம் இருந்துள்ளது.
பிரகாஷ் கடந்த 2018 ஆம் ஆண்டில் அன்புநாதனுக்கு ரூ.1 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. பைப் கம்பெனி நடத்தி வரும் அதிமுக பிரமுகர் அன்புநாதன், தனது நிறுவனத்தில் பங்குதாரராக இணைத்துக் கொள்வதாக கூறி, பிரகாஷிடம் கடந்த 2020ஆம் ஆண்டு மீண்டும் ரூ.2 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.
பணத்தைப் பெற்றுக் கொண்ட அன்புநாதன் நாட்கள் கடந்தும் அவரது நிறுவனத்தில் பங்குதாரராக இணைத்துக் கொள்ளாத காரணத்தால் பிரகாஷ் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அன்புநாதன் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என்று பிரகாஷை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், கரூர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அன்புநாதனை கடந்த ஒரு வாரமாக தேடி வந்துள்ளனர். அன்புநாதன் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், இன்று அதிமுக பிரமுகர் அன்புநாதனை அய்யம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கரூர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2016 தேர்தலின் போது இவரது வீட்டிலிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: கார்த்திகேயன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Karur, Local News