குடித்துவிட்டு தினமும் ரகளை செய்யும் கணவருடன் செல்ல மறுத்து ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த கர்ப்பணி பெண்
குடித்துவிட்டு தினமும் ரகளை செய்யும் கணவருடன் செல்ல மறுத்து ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த கர்ப்பணி பெண்
ஆட்டோவில் இருந்து குதித்த கர்ப்பிணி பெண்ணும் காதல் கணவனும்
குமரி மாவட்டம் அருமனை பகுதியில் காதல் கணவனுடன் செல்ல மறுப்பு தெரிவித்து ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த இளம் கர்ப்பணி பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இலவுவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். 29 வயதான இவருக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கவிதா என்ற இளம் பெண்ணுடன் வேலைக்கு செல்லும் போது பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. பின்னர் திருமணம் செய்வதற்காக குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்து கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து தனது வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டின் நிலைமை அறிந்த கவிதா கடையாலுமூடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது சுயரூபத்தை காட்ட துவங்கிய கண்ணன் மது குடித்து வந்து கவிதாவிடம் பணம் கேட்டு தாக்குதல் நடத்தி துன்புறுத்தி வந்துள்ளார். கணவர் தாக்குவது மட்டுமில்லாமல் அவரது தாயாரும் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதை தாங்கி கொள்ள முடியாத கவிதா தான் வேலை பார்த்து வந்த கடையாலுமூடு பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தனியாக தங்கி இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தினமும் இரவு நேரத்தில் மது குடித்துவிட்டு கடையாலுமூடு பகுதிக்கு வரும் கண்ணன் கவிதாவின் வீட்டின் முன் ரகளையில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இதனை வீட்டின் உரிமையாளர் பல முறை எச்சரித்துள்ளார். அதனை கண்ணன் பொருட்படுத்துவது போல் இல்லாமல் தொடர்ச்சியாக ரகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவும் கண்ணன் கவிதாவின் வாடகை வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபடுவதை கண்டு வீட்டின் உரிமையாளர் கவிதாவை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்.
இரண்டு மாத கர்பமாக இருக்கும் நிலையில் எங்கு செல்வது என தெரியாமல் கவிதா திகைத்து நின்றபோது கண்ணன் கவிதாவை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவருடன் செல்ல கவிதா எதிர்ப்பு தெரிவித்து போராடிய நிலையில் ஆட்டோ அருமனை பகுதியில் வந்தபோது கவிதா ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு சிறிது காயம் ஏற்பட்டு உள்ளது.
உடனே இதனை அக்கம் பக்கத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து ஆட்டோவை சுற்றி வளைத்து பிடித்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அருமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரிடமும் உரிய காரணங்களை விசாரித்துவிட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.