கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி நகைகளை அடகு வைத்து மனைவிக்கு 3-மாடி பங்களா வீடு கள்ள காதலியுடன் சொகுசு காரில் இன்ப சுற்றுலா என வலம் வந்த முடி திருத்தும் தொழிலாளி போலீசார் கைது செய்ததோடு கள்ள காதலியையும் தேடி வருகின்றனர்
கன்னியாகுமரி மாவட்டம் முதலார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சித்திரங்கோடு பகுதியில் நகை அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் சுரேஷ் கடையில் இல்லாத நிலையில் பெண் ஊழியர் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். அப்போது அடகுக் கடைக்கு வந்த பெண் ஒருவர் தன்னை காவியா என்று அறிமுகப்படுத்தி 9 கிராம் எடை கொண்ட வளையல் ஒன்றை 30,000 ரூபாய்க்கு அடகு வைத்து பணத்தை பெற்று சென்றுள்ளார்.
மாலை கடைக்கு வந்த சுரேஷ் அடகு பிடித்த நகைகளை சரிபார்த்துள்ளார். அப்போது 1வளையல் மட்டும் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால் அதை சோதித்த போது அது போலி வளையல் என்பது தெரியவந்தது. காவியா என்ற பெண் போலி நகையை ஏமாற்றி அடகு வைத்து சென்றுள்ளார். உடனே சுரேஷ் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சொகுசு காரில் ஒரு ஆணுடன் வந்து இறங்கிய இளம்பெண் அந்த போலி வளையலை அடகு வைத்து செல்வது பதிவாகி இருந்தது. இதனையடுத்து சுரேஷ் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
இந்த நிலையில் கொற்றிகோடு போலீசார் நேற்று காலை வேர் கிளம்பி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த சொகுசு காரை மடக்கி காரை ஓட்டி வந்த அந்த நபரை விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியான ஜேசுராஜா என்பது செட்டிக்குளம் பகுதியில் சலூண் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவவ்கள் வெளியானது.
செட்டிகுளம் பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் ஜேசுராஜாவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீடு கார் என சொகுசாக வாழ விரும்பிய ஜேசுராஜாவுக்கு சலூன் கடை வருமானம் கைகொடுக்காத நிலையில் குறுக்கு வழியில் கோடீஸ்வரன் ஆக கடந்த இரண்டு வருடத்திற்கு முன் திட்டமிட்டு வந்ததுள்ளார். அப்போது கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் வறுமையில் வாழ்ந்து வந்த செட்டிகுளம் பகுதியை சேர்ந்த இளம் பெண் அனுஷா என்பவருடன் கள்ள தொடர்பை ஏற்பட்டுள்ளது.
ஜேசுராஜா அந்தப் பெண்ணுடம் சேர்ந்து திட்டமிட்டு கேரளாவில் இருந்த கவரிங் வளையல்களை வாங்கி வந்துள்ளார். சிறிய நகை அடகு பிடிக்கும் கடைகளை குறிவைத்து அவசர தேவைக்கு அடகு வைப்பது போல் கள்ள காதலி அனுஷாவை அனுப்பி நாடகமாடி அடகு வைத்து மோசடி செய்து வந்துள்ளார். லட்சக் கணக்கான ரூபாய்க்கு போலி நகைகளை அடகு வைத்ததும் அதில் கிடைத்த பணத்தில் மனைவிக்கு 3-மாடியில் பங்களா வீடும் கட்டி கொடுத்ததோடு கள்ள காதலியுடன் சொகுசு காரில் பல்வேறு பகுதிகளுக்குஇன்ப சுற்றுலா சென்று அறை எடுத்து தங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
தற்போது மீண்டும் போலி நகைகளுடன் கடந்த மூன்று நாட்களில் சுரேஷ் கடை உட்பட 7-நகை அடகு பிடிக்கும் கடைகளில் போலி வளையல்களை பல லட்ச ரூபாய்க்கு அடகு வைத்ததும் தற்போது வேர்கிளம்பி பகுதியில் உள்ள நகை அடகு கடைக்கு வளையல்களை அடகு வைக்க வந்த போது சிக்கி கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனையடுத்து சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் ஜேசுராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.தலைமறைவாக இருக்கும் கள்ள காதலி அனுஷாவை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இவர்கள் ஜோடியாக சென்று போலி நகைகள் அடகு வைத்துள்ளதாக சிசிடிவி ஆதாரங்களுடன் புகார்கள் இருப்பதாக தெரிவிக்கும் போலீசார் ஜேசுராஜாவை போலீஸ் காவலில் எடுத்து கள்ள காதலி அனனுஷாவையும் பிடித்து மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.