முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / கேஸ் சிலிண்டருக்கு பணம் கேட்ட மாமனார்... கோடாரியால் வெட்டி கொன்று நாடகமாடிய மருமகன்!

கேஸ் சிலிண்டருக்கு பணம் கேட்ட மாமனார்... கோடாரியால் வெட்டி கொன்று நாடகமாடிய மருமகன்!

மாமனார் - மருமகன்

மாமனார் - மருமகன்

Kanniyakumari murder | மாமனாருடன் மது அருந்தி கொண்டிருந்த மருமகன் திடீரென கோடாரியால் வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரியில், கேஸ் சிலிண்டருக்கு பணம் கேட்டதால் மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு நாடகமாடிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (61).

இவர் வேர்க்கிளம்பி பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கிறிஸ்துதாசின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால்,  மூன்றாவது மகள் ஜான்சி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை கிறிஸ்துதாஸ் வீட்டில் மயங்கி கிடந்ததாக கூறப்பட்டு அவரது மகள் ஜான்சி, மருமகன் பாக்யராஜ் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கிறிஸ்துவதாசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின் கிறிஸ்துதாஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர். அப்போது கிறிஸ்துதாசுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், அவர் மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்ததாகவும் மகளும் மருமகனும் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. போலீசாருக்கு கிறிஸ்துதாசின் மருமகன் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்திய போது, கோடாரியால் மாமனாரை வெட்டி கொலை செய்ததாக ஒப்பு கொண்டுள்ளார். மேலும், தான் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறேன். வாரத்துக்கு ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வருவேன். அப்போது எனது மாமனார் உடன் மது அருந்துவது வழக்கம். நேற்று இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது எனது மாமனார் கியாஸ் சிலிண்டருக்கு ஆயிரம் பணம் கேட்டார்.

அப்போது நான் அவரிடம் பணம் இல்லை என்று தெரிவித்தேன். பின்னர் நான் அங்கிருந்து சென்று விட்டேன். மீண்டும் வீட்டிற்கு வந்தபோது என்னிடம் அவர் பணம் கேட்டதால் நான் ஆத்திரம் அடைந்தேன். இதையடுத்து அந்த பகுதியில் கிடந்த கோடாரியால் அவரை தலையில் தாக்கினேன். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அந்த கோடாரியை பக்கத்தில் உள்ள கிணற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனது மனைவியுடன் சேர்ந்து மாமனார் மயங்கி விட்டதாக கூறி நாடகமாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன் என கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் மருமகன் பாக்யராஜை கைது செய்து, கிணற்றில் வீசிய கோடாரியை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கைப்பற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Kanniyakumari, Local News, Murder