முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / பிரபல துணிக்கடை பார்க்கிங்கில் கார் திருட்டு... கடையின் முன்னாள் ஊழியர் துணிகரம்!

பிரபல துணிக்கடை பார்க்கிங்கில் கார் திருட்டு... கடையின் முன்னாள் ஊழியர் துணிகரம்!

கார் திருட்டு

கார் திருட்டு

Kanniyakumari car theft | கடையின் முன்னாள் ஊழியரே திருட்டுத்தனமாக காரை திருடி சென்றது தெரியவந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரபல துணிக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.  கார்களில் வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதால் கார் பார்க்கிங்  வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாங்காடு மெதுகும்மல் பகுதியை சேர்ந்த  ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல்., ஊழியர் பென்சாம் (வயது 69) தனது காரை கடையில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியுள்ளார். அங்கு காரை நிறுத்தியதற்கான டோக்கனையும் பெற்ற அவர் காவலாளியிடம் கார் சாவியை ஒப்படைத்து, பின்னர் கடையில் துணியை எடுத்து விட்டு மீண்டும் காரை எடுக்க வந்தபோது கார் மாயமாகியிருந்தது.

அங்கிருந்த காவலாளிகளும் காரை தேடினர். பின்னர் அதிர்ச்சியடைந்த பென்சாம் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  நேசமணிநகர்  போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது பென்சாம் காரை 2 வாலிபர்கள் திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. பின்னர் நடத்திய விசாரணையில், காரை திருடிய நபர் ஏற்கனவே அதே துணிக்கடையில் வேலை பார்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரான இறச்சகுளத்தை சேர்ந்த ராஜா (28) மற்றும் அவரது நண்பர் ராஜன் (22) என்பது தெரியவந்தது.

பென்சாம் காரை நிறுத்தியதும் அங்கிருந்த ராஜா அதை கவனித்து அந்த காரின் நம்பரை குறித்து கொண்டார். ஏற்கனவே அந்த ஜவுளிக் கடையில் வேலை பார்த்த பழக்கத்தில் காவலரிடம் ராஜா பேச்சு கொடுத்து, அங்கிருந்த ஒரு டோக்கனை திருடியுள்ளார். பின்னர் அந்த டோக்கனில் பென்சாமின் கார் நம்பரை எழுதி வைத்து கொண்டார்.

அந்த காவலாளி டீ குடிக்க அருகே உள்ள கடைக்கு சென்றபோது, மற்றொரு காவலாளி அங்கு பணிக்கு வந்தார். அந்த காவலாளிக்கு ராஜா அங்கு வேலை பார்த்த விஷயம் தெரியாது என்பதால் அதனை தனக்கு சாதகமாக்கி கொண்டு தான் வைத்திருந்த டோக்கனை காண்பித்து பென்சாம் காரை தனது கார் என கூறி எடுத்து சென்றார். இதற்கு அவருடைய நண்பர் ராஜனும் உடந்தையாக இருந்துள்ளார். காவலாளியும் டோக்கனை பெற்று கொண்டு காரை வெளியே செல்ல அனுமதித்தார் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று வடசேரி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

மேலும் காரில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜவுளி கடையில் காரை திருடிய ராஜா, ராஜன் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து காரை மீட்டனர்.

செய்தியாளர்: சரவணன், நாகர்கோவில்.

First published:

Tags: Car, Kanniyakumari, Local News, Theft