சாபத்தை போக்க பரிகார பூஜை நடத்துவதாக கூறி 55 பவுன் நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாயை லாவகமாக சுருட்டிய பெண் மந்திரவாதி மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம், வெள்ளாயணி பகுதியை சேர்ந்தவர் விஸ்வம்பரன். இவரது குடும்பத்தில் பல தொடர் மரணங்கள் நடந்துள்ளன. இதனால் மனமுடைந்த இவர் ஜோதிடர் ஒருவரை பார்த்துள்ளார்.
ஜோதிடரோ பரிகார பூஜை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதன்படி ஜோதிடரின் ஆலோசனைக்கு ஏற்ப குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த தெற்றியோடு தேவி என்று அழைக்கப்படும் வித்யா என்ற பெண் மந்திரவாதியை விஸ்வம்பரன் நாடியுள்ளார்.
இதையும் படிங்க : சர்வதேச கரலாகட்டை தினம்.. புதுச்சேரியில்1000 பேர்கூடி கரலாக்கட்டை சுற்றி சாதனை!
பெண் மந்திரவாதியை நேரில் சந்தித்ததை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு பெண் மந்திரவாதி அவரது வீட்டிற்கு நேரடியாக வந்து பரிகார பூஜை நடத்துவதாக கூறியுள்ளார். ஒரு சில நாட்களில் விஸ்வம்பரன் வீட்டிற்கு வந்த பெண் மந்திரவாதி குடும்பத்திற்கு கடுமையான சாபம் இருப்பதாக கூறி வீட்டின் அறை ஒன்றை பரிகார பூஜையை அறையாகவும் மாற்றியுள்ளார்.
இந்நிலையில், ஒரு வாரத்திற்கு மேல் பெண் மந்திரவாதியும், அவருடன் வந்தவர்களும் சேர்ந்து இவரது பூஜை நடத்தியுள்ளனர். மேலும் “சாபம் இன்னும் முடியவில்லை. வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை வைத்தும் பூஜை செய்ய வேண்டும்” என்றும் பெண் மந்திரவாதி கூறினார்.
இதை நம்பிய வீட்டார் 55 பவுன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாயையும் பூஜைக்காக கொடுத்துள்ளனர்.
பூஜை முடித்த பின்பு இரு வாரத்திற்கு பின் தன்னிடம் கேட்டு விட்டு பூஜை அறையை விட்டு நகையையும், பணத்தை எடுக்கவும் என முதலில் கூறிய பெண் மந்திரவாதி பின்னர் சாபம் இன்னும் முடியவில்லை மூன்று மாதங்கள் தாண்டி எடுங்கள் என கூறியுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு பின்னர் ஒரு வருடம் கழிந்து எடுங்கள் என கூறியதை தொடர்ந்து, சந்தேகம் அடைந்த வீட்டார் பூஜை அறையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 55 பவுன் நகை மற்றும் பணமும் காணமால் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்பு கேரள போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இவர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் பெண் மந்திரவாதி மீதும் அவரது கூட்டாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூட நம்பிக்கையால் ஒரு குடும்பத்தாரே ஏமாற்றப்பட்ட சம்பவம் தற்போது கேரளாவிலும், குமரியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanniyakumari, Local News