காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட அவளூர், அங்கம்பாக்கம், ஆசூர் கண்ணடியன்குடிசை, கணபதிபுரம், தம்மனூர், கம்மராசபுரம், இளையனார் வேலூர்,
காவாந்தண்டலம் உள்ளிட்ட உத்திரமேரூர் வரையிலான 30க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களை வாலாஜாபாத் பாலாற்றில் உள்ள தரைப்பாலம் தான் வாலாஜாபாத் நகரோடு இணைக்கும் முக்கிய வழியாக இருந்து வருகிறது.
இந்த வாலாஜாபாத் அவளூர் இடையிலான 1.2 கிலோமீட்டர் நீளமுள்ள தரைப்பாலமானது கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத வடகிழக்கு பருவமழை மழையின் காரணமாக பாலாற்றில் 2 மில்லியன் கன அடி நீர் வெள்ளப்பெருக்காக ஓடியது. இதன் விளைவாக போக்குவரத்திற்கு முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு தரைப்பாலம் முழுவதும் சேதமடைந்தது.
இந்நிலையில், தரைப்பாலம் சேதமடைந்ததால் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக வாலாஜாபாத் நகரை வந்தடைவதற்கு கிட்டத்தட்ட சுமார் 30 கிலோ மீட்டர் வரை கூடுதலாக சுற்றிக்கொண்டு சென்று வந்தனர்.
மேலும் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சென்னை, உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்குச் செல்லும் தொழிலாளர்களும், கிராமப்புறங்களில் இருந்து வாலாஜாபாத் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் இதனால் பெரும் சிரமமடைந்து வந்தனர்.
இதன் காரணமாக வாலாஜாபாத் அவலூர் இடையிலான 1.2 கிலோ மீட்டர் நீளமுள்ள தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டு கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கன மழையின் காரணமாகவும், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாலாறு அணைக்கட்டில் இருந்து பாலாற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீராலும், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் இந்த வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தில் கன ரக வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரைப்பாலம் மீண்டும் சேதம் ஆகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற பருவ மழைக்காலத்தில் தொடர்ந்து இந்த வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலம் சேதமடைந்து 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி அவதிப்படும் சூழ்நிலை உருவாகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனால் வாலாஜாபாத் -அவளூர் தரைப்பாலத்தை புதிய உயர் மட்ட மேம்பாலமாக அமைத்து தந்து, தங்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசிற்கும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
காஞ்சிபுரம் செய்தியாளர் - கார்த்திக்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News