கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணத்தை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் ஆதிதிராவிடர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை குறிவைத்து சதி நடப்பதாக திருமாவளவன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்றுவந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். பள்ளியின் மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது. எனினும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுகிறது.
முன்னதாக, மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி, தனியார் பள்ளியை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதோடு மேசை, நாற்காலி போன்றவற்றை போராட்டக்காரர்கள் எடுத்து சென்றனர். பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் தீ வைக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றம் இந்த வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டது. 300க்கும் மேற்பட்டோர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகம் ஒன்று, போராட்டத்தின் பின்னணியில் ஆதிதிராவிடர்கள் உள்ளதாக உளவுத்துறை கூறியதாக குறிப்பிட்டுள்ளது. இதற்கு திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கனியாமூர் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகள் - அமைச்சர் அன்பில் மகேஷ்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாணவி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும்வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. உளவுத் துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருமாவளவன், ‘அரசுக்கு அளித்த இரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது. இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் மாணவியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது’ என தெரிவித்துள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(கள்ளக்குறிச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.