இலங்கையில் அரசுக்கு எதிராக நாடாளுமன்றம் அருகே பல்கலைக் கழக மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்நிலையில், நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கோரிக்கையை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்காக பல்கலைக் கழக மாணவர்கள் வியாழக்கிழமை சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நாடாளுமன்றத்தை முற்றுகையிடச் செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதனால், பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில், நாடு தழுவிய அளவில் தொழில்சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால், கடைகள், அலுவலகங்கள், பள்ளிகள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்த நிலையில், அலுவலகங்களுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று, கடைகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. பல்வேறு போராட்டக்காரர்களும் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்தனர். போக்குவரத்து மற்றும் ரயில்வே தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்ததால், முற்றிலுமாக போக்குவரத்து முடங்கியது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
Must Read : தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம்.. தமிழகம் முழுவது அதிரடி சோதனை
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர், வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எந்த அறிவிப்பையும் சபாநாயகர் வெளியிடவில்லை. இதனால் அமளி ஏற்பட்டது.
இதன் காரணமாக, சபாநாயகர் அலுவலகத்தை முக்கிய எதிர்க்கட்சியான எஸ்ஜேபி கட்சியினர் முற்றுகையிட்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துவதற்கான தேதியை அறிவிக்காவிட்டால், நாடாளுமன்றத்துக்குள் மக்களை அழைத்து வந்து போராட்டம் நடத்துவோம் என்று எம்.பி.க்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து, இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்படுவதாக அதிபா் கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளாா். அதிபா் அலுவலக செய்திப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‘பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அத்தியாவசிய சேவைகள் எந்தவித பாதிப்புமின்றி மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1ம் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.