உக்ரைனில் தலைநகர் கீவ்-வைச் சுற்றியுள்ள பகுதிகளில் படைகளைக் குறைப்பதாக கூறிவிட்டு ரஷ்யா ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையே துருக்கியில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, கீவ் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் படைகள் உக்ரைனின் வேறு பகுதியில், தாக்குதலை தீவிரப்படுத்த பயன்படுத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் அறிவிப்பால் கீவ் நகருக்கான அச்சுறுத்தல் முடிந்து விட்டது என கருத முடியாது எனவும் ஜான் கிர்பி வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, பிரசல்சில் ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற உள்ள நேட்டோ, உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையில் அமைதிக்கான நேர்மறையான அறிகுறிகள் தெரிவதாகவும், அதேநேரம் தங்களது பாதுகாப்பிற்கான முயற்சிகளை குறைக்க மாட்டோம் எனவும், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போர் முடியும் வரை ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகள் நீடிக்கும் எனவும் அவர் பேசியுள்ளார். இதனிடையே, படைகள் குறைக்கப்படும் என கூறியிருப்பதை, போர் நிறுத்தம் என்று கருதக்கூடாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. இரு தரப்பும் ஒரு வரைவு அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டவுடன், புதின் மற்றும் செலன்ஸ்கி இடையேயான நேரடி பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.