ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தானுக்கு எதிராக ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் தூதரகம் முன்பு அவர்கள் பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். தாலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைக்கவுள்ள தாலிபான்கள் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் சென்றுள்ளதை தங்களுக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. தாலிபான்களின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் ஹக்கானி நெட்வோர்க் பாகிஸ்தான் அரசுக்கு மிகவும் நெருக்கமான அமைப்பாகும்.
இந்த அமைப்பை ஆப்கான் அரசில் பங்கு பெற வைக்க பாகிஸ்தான் காய் நகர்த்தி வருகிறது. இதற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவர் ஹமீது ஃபயஸ் காபூலில் முகாமிட்டுள்ளார். ஹக்கானி நெட்வோர்க்கிற்கும் தாலிபான்களின் நம்பர் - 2 நிலையில் இருக்கும் கமாண்டர்களான முல்லா யாக்கூப், முல்லா அப்துல் கனி பரதர் சகோதரர்களுக்கும் இடையே நிலவும் வேறுபாட்டை பேசி தீர்க்க அவர் முயன்று வருகிறார்.
இதேபோல், ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தானின் சிறப்பு பிரதிநிதி முகமது சாதிக் , ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான், துர்க்மெனிஸ்தான்,உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா ஆகியவற்றின் தூதரக அதிகாரிகளுடன் ஆன்லைன் மூலம் சந்திப்பு நடத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தாலிபானுக்குள் ஸ்லீப்பர் செல்.. பாகிஸ்தானின் நரித்தந்திரம் - பக்கா பிளானுடன் காபுல் பறந்த ஐஎஸ்ஐ தலைவர்!
இதன்மூலம், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்த முயல்வது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதேவேளையில், தங்கள் நாட்டின் விவகாரத்தில் பாகிஸ்தானோ அல்லது மற்ற நாடுகளோ குறுக்கிடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று தாலிபான்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தானுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்ட பலர், பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு அந்நாட்டுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். முதலில் பெண்கள் அதிகளவு கூடினர்; அதனை தொடர்ந்து ஆண்களும் கூடி கோஷம் எழுப்பினர்.
மேலும் படிக்க: தாலிபான்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் கட்டளையிட்டது - அம்பலப்படுத்திய ஆப்கன் துணை அதிபர்!
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் விடுதலை வேண்டும் என்றும் அவர்கள் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தை படம் பிடிக்க முடியாதவரை பத்திரிக்கையாளர்களை தாலிபான்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் விதமாக வானத்தை நோக்கி தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்கள் கலைந்து சென்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.