கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்தே அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அலுவலகங்களுக்குச் செல்ல தடை, பூங்கா, உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்ல தடை, பல்கலை கழகங்களுக்குச் செல்ல தடை என பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கான சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்பட்டு விட்டதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
தற்போது சர்வதேச தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் தலிபான் அரசு தடை விதித்துள்ளது. இஸ்லாமிய சட்டப்படி ஆடை அணியாததே இந்த தடைகளுக்கெல்லாம் காரணம் என தலிபான் அரசு கூறி வருகிறது. ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் லட்சக் கணக்கான பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஆப்கனில் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றன. அந்த நிறுவனங்கள் அங்குள்ள பெண்களை ஊழியர்களாக நியமித்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
அப்படி பணிபுரியம் பெண் ஊழியர்கள் முறையான ஆடை கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி தலிபான்கள் பெண் ஊழியர்களுக்கு தடை விதித்துள்ளார்கள். இதனால் ஆப்கனில் மனிதாபிமான உதவிகள் செய்யும் பணி தடைபட்டுள்ளதாக தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. வெளிநாட்டு பெண் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என தலிபான்கள் விளக்கம் அளித்தாலும், தடையால் தொண்டு நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே நான்கு பெரிய சர்வதேச நிறுவனங்கள் தங்களின் மனிதாபிமான சேவைகளை நிறுத்தியுள்ளன. தற்போது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமும் தனது சேவையை நிறுத்தியுள்ளது. லட்சக் கணக்கான ஆப்கன் மக்கள் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் உள்ளனர். எனவே இந்த தடையை நீக்க வேண்டியது அவசியம் என்று கருத்துக் கூறியுள்ளார் UNAMA(United Nations Assistance Mission in Afghanistan) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமீஸ் அலக்பாரோவ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் மொகமது ஹனிஃபை நேரில் சந்தித்தும் ரமீஸ் வலியுறுத்தியுள்ளார்.
இனி வரும் காலம் ஆப்கனில் கடுமையான பனிக்காலம் என்பதால் அத்தியாவசிய மற்றும் அடிப்படை உதவிகளுக்கான தேவை இன்னும் அதிகம் ஏற்படும். ஆனால் தலிபான் அரசின் இந்த கட்டுப்பாடுகளால் தொண்டு நிறுவனங்களின் சேவை பாதிக்கப்படும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது. எனவே இது போன்ற தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்க தலிபான் அரசு முன்வர வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
- செய்தியாளர் : ரோசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Taliban, Women