பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் வலுத்துள்ள நிலையில், அந்நாட்டு தலைநகரில் காலவரையன்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைநகர் கொழும்புவில் ராணுவம் மற்றும் காவல்துறை உஷார் நிலையில் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அந்நாட்டின் மதத் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர், சிவில் உரிமை ஆர்வலர்கள், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோர் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவரும் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கை மீறியும் இலங்கை தலைநகர் கொழும்புவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, அந்நாட்டின் அதிபர் மாளிகை முன் திரண்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். காவல்துறையை மீறி அதிபர் மாளிகைக்குள் இவர்கள் நுழைய முயற்சி செய்தனர்.
இதையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீச்சு போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்த முயற்சித்தனர். பாதுகாப்பை மீறியும் அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததால், அதிபர் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. அவர் காரில் தப்பி செல்லும் வீடியோவும் வெளியாகியுள்ளது. பத்திரமுல்லை பகுதியில் உள்ள ராணுவ மையத்தில் அதிபர் கோத்தபயா பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச தப்பியோட்டம்#Srilanka #SriLankaCrisis #GotabayaRajapaksa pic.twitter.com/IFdv8Jrkcv
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 9, 2022
கடந்த மூன்று மாதமாகவே இலங்கை அரசு பெரும் போராட்ட களமாக மாறியுள்ளது. கோவிட் பரவலுக்குப் பின் அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கே அங்கு தடுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜப்பான் முன்னாள் பிரதமர் மரணத்தை கொண்டாடி சர்ச்சையில் சிக்கிய சீனர்கள்
அத்தியாவசிய பொருள்களின் விலை விண்ணை முட்டியதால் மக்கள் தெருக்களில் இறங்கி பெரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த மோசமான சூழலுக்கு ஆட்சி நடத்திவரும் ராஜபக்சே குடும்பம் தான் காரணம் என மக்கள் போராடி வருகின்றனர். மக்களின் பெரும் போராட்டத்தை அடுத்து மகிந்தா ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இந்நிலையில், அந்நாட்டின் பொருளாதார சூழல் மோசமான நிலையே தொடர்வதால் மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமாக தலை தூக்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gotabaya Rajapaksa, Sri Lanka, Sri Lanka political crisis