இலங்கையில் மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், , ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டி.ஏ.ராஜபக்சேவின் சிலையை போராட்டக்காரர்கள் சேதப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான நடவடிக்கைகளே இதற்கு காரணம் என பொது மக்களும், அரசியல் கட்சிகளும் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த திங்களன்று நடைபெற்ற போராட்டத்தின்போது ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால் வன்முறை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பரம்பரை வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. ஆளுங்கட்சி எம்பிக்கள் வீடுகளும் சூறையாடப்பட்டு வருகிறது.
கடந்த 2 தினங்களாக நடந்த வன்முறை சம்பவங்களில் ஆளும் கட்சி எம்.பி., உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். 220-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 47 வாகனங்கள் மற்றும் 38 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதாகவும், 41 வாகனங்கள் மற்றும் 65 வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
ராஜபக்சே மகள் யோசிதா வெளிநாட்டிற்கு தப்பியோடிய நிலையில், ராஜபக்சேவின் மனைவியும் ஹெலிகாப்டர் மூலம் திம்பிரிகஸ்யாக போலிஸ் மைதானத்தில் இருந்து திருகோணமலைக்கு தப்பி ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அவரது மகன் நமல் ராஜபக்சே மறுத்துள்ளார்.
மேலும் படிக்க: இலங்கையில் பெட்ரோல் , டீசல் விற்பனை நிறுத்தம்!
இதனிடையே ராஜபக்சே சகோதரர்களின் தந்தையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவருமான டி.ஏ. ராஜபக்சேவின் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.