இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார் என அந்நாட்டில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் ராஜபக்சே சகோரதரர்கள் பதவி விலக வேண்டும் என தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டக்காரர்களை மீது பிரதமர் மகிந்தாவின் ஆதாரவாளர்கள் இன்று காலை தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக தலைநகர் கொழும்புவில் வன்முறை வெடித்து, அங்கு ஊரடங்கு நிலை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டகரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை பிரச்னை, விலைவாசி உயர்வு ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்தது. அந்நாட்டின் அந்நிய செலாவணி முற்றிலும் காலியான நிலையில், ராஜபக்சேக்கள் ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதை சமாளிக்க மற்ற குடும்ப உறுப்பினர்களை அரசில் இருந்து அப்புறபடுத்திய அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது சகோதரர் மகிந்தாவை மட்டும் பிரதமராக நீட்டிக்க செய்தார்.
மகிந்தா பதவியில் இருந்து விலக மாட்டேன் என விடாப்பிடியாக இருந்துவரும் நிலையில், எதிர்க்கட்சிகளும் போராட்டக்காரர்களும் தங்கள் கோரிக்கையில் இருந்து பின் வாங்கவில்லை. இதையடுத்து தற்போது மகிந்தா பதவி விலகியுள்ள நிலையில், அவர் தரப்பில் இருந்தோ அல்லது அதிபர் கோத்தபயா தரப்பில் இருந்தோ இது தொடர்பான அறிக்கை வெளியாகுமா என எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அடுத்த பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசா பதவிக்கு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:
உலகின் மிகப் பெரிய சன் டூங் குகை... சுற்றிப்பார்க்க யார் யாரெல்லாம் செல்லலாம்?
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் பொருளாதார உதவி செய்துவரும் நிலையில், இந்தியாவும் இலங்கையில் ஏற்படும் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.