அல்கொய்தா, ஐ.எஸ். உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் ஐ.நா. குழு தனது 26-வது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இதில், தலிபான் கீழ் செயல்படும் இந்திய துணைக்கண்டத்திற்கான அல்கொய்தா (al-Qaeda in the Indian Subcontinent) என்ற அமைப்பு ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மாண்ட், காந்தகார் ஆகிய மாகாணங்களில் இருந்து செயல்பட்டு வருவதாகவும், வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் நாடுகளில் இந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 150 முதல் 200 பேர் வரை இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்கொய்தாவின் முன்னாள் தலைவர் ஆசிம் உமர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாக இந்தியாவில் தாக்குதல் நடத்த அதன் தற்போதைய தலைவர் ஒசாமா மெகமூத் திட்டமிட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐஎஸ் அமைப்பின் இந்தியக் கிளையான ஹிந்த் விலாயா கடந்த ஆண்டு மே 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில். தனக்கு இந்தியாவில் 180 முதல் 200 தீவிரவாதிகள் இருப்பதாக கூறியுள்ளதை சுட்டிக்காட்டி ஐ.நா., அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில்தான் அதிகளவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக கூறியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரில் ராணுவத்துக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்தியாவில் புதிய நிர்வாகப் பகுதியை உருவாக்கி இருக்கிறோம் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஆப்கனில் உள்ள 6000 முதல் 6,500 வரையிலான பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் அந்த அறிக்கையில் ஐ.நா. தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்றும், இந்த அமைப்பால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் என இருநாடுகளுக்குமே அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.