உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இந்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதே இங்கு பலருக்கும் சவாலான பணியாக இருக்கிறது. கனவுகளை சுமந்துக்கொண்டு பெருநகரங்களுக்கு படையெடுக்கும் இளைஞர்கள் வறுமையின் சூழல் காரணமாக கிடைக்கும் வேலைகளில் தங்களை பொருத்திக்கொள்கின்றனர்.
சாப்பிட்டியான்னும் அம்மா அலைபேசியில கேட்கும்போது காலி வயிற்றுடன் சாப்பிட்டேன்மான்னு சொல்லும் இளைஞர் பட்டாளம் இருக்கத்தான் செய்கின்றனர். பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்தாலும் இங்கு சிங்கிள் டீ தான் பலருக்கும் காலை உணவாக இருக்கிறது. சரியான கஞ்சன் என்று பேசும் சமூகம் அவனது சூழல் தெரிந்தால் இப்படியான வார்த்தைகளை உதிர்க்கமாட்டார்கள்.
மலேசியாவை சேர்ந்த அபிட் என்பவர் செக்யூரிட்டியாக பணிபுரியும் தன் நண்பர் தினமும் பழைய சோற்றையும்.. பூண்டையும்.. வெங்காயத்தையும் தான் உணவாக எடுத்துக்கொள்கிறார் என சமூகவலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். குடும்ப வறுமையின் காரணமாக அவர் இந்த உணவை எடுத்துக்கொள்வதாக பதிவிட்டுள்ளார். முதல் புகைப்படம் உணவு பார்சல் செய்யப்பட்டுள்ளதுபோல் உள்ளது. இரண்டாவது படத்தை பார்க்கும்போது அவர் பழைய சாதமும் வெங்காயத்தையும் உணவாக எடுத்துக்கொள்வது தெரிகிறது.
அந்த ஃபேஸ்புக் பதிவில், ‘சிறந்த மனிதருக்கான உதாரணம்.. கடினமான உழைப்பாளி.. எல்லோரையும் போலவே இவருக்கும் நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆனால் இவர் ஏன் பழைய சாதம், பூண்டு, வெங்காயம் சாப்பிடுகிறார். ஏன் என்றால் இவர் கிராமத்தில் உள்ள தனது குடும்பத்தை நேசிக்கிறார். தான் சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு முழுவதையும் குடும்பத்துக்கே அனுப்பிவிடுவார். சில சமயங்களில் நான் அவரை அழைத்து அவருக்கு உணவு கொடுப்பேன். அவர் எளிமையாகவே இருப்பார்’ என்று அந்தப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வைத்துக்கொள்ளும் சொற்ப பணத்தில் அவரால் பழைய உணவைதான் சாப்பிடமுடியும் என அபிட் கூறியுள்ளார். இந்தப் பதிவை பார்த்த பலர் அபிட்டை பாராட்டியுள்ளனர். செக்யூரிட்டியாக பணிபுரியும் அவரது நண்பருக்கு உதவ பலர் முன்வந்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.