உக்ரைனில் இரண்டு கிளர்ச்சிக் குழுக்கள் செயல்படும் பகுதிகளின் விடுதலையை ரஷ்யா அங்கீகரித்துள்ளதால், அந்நாட்டின் மீது புதிய தடைகள் விதித்துள்ளதாக என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் உள்ள இரண்டு பகுதிகள் டோன்ஸ்டெக் மற்றும் லஹன்ஸ்சக். இவை இரண்டையும் டோன்ஸ்டெக் மக்கள் குடியரசு மற்றும் லஹன்ஸ்சக் மக்கள் குடியரசு என்ற இரு கிளர்ச்சிக் குழுக்கள் ஆட்சி செய்து வருகின்றன. உக்ரைன் அரசு, இந்த இரு குழுக்களையும் பயங்கரவாத அமைப்பாக பாவித்து வருகிறது. இந்நிலையில் இந்த இரு பகுதிகளையும் சுதந்திரம் பெற்ற பகுதிகளாக ரஷ்ய அதிபர் புதின் அங்கீகரித்துள்ளார். கிரெம்ளின் மாளிகையில், இதற்கான உத்தரவில் அதிபர் புதின் கையெழுத்திட்டார்.
இதனை தொடர்ந்து இரு குழுக்களுக்கும் தங்கு தடையின்றி ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை ரஷ்யா அளிக்க முடியும். ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து கிழக்கு ஐரோப்பாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை நடத்தியது. அதில் பேசிய, இந்திய பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, உலக அமைதிக்காக உக்ரைன் - ரஷ்யா இடையே நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதின் அமைதியை சீர்குலைக்க முயன்று வருவதாக குற்றம்சாட்டினார். மக்கள் அமைதி காக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
ரஷ்யா அங்கீகரித்துள்ள இரண்டு கிளர்ச்சிக் குழுக்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது மட்டுமல்லாமல் ரஷ்யா மீது இரண்டு புதிய தடைகளையும் விதிக்க போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைன் எல்லைப்பகுதியில், ரஷ்யா அதி நவீன போர் விமானங்கள், டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை நிலை நிறுத்தியுள்ளது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.