கூட்டணி கட்சிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
கூட்டணி கட்சியை சேர்ந்த 41 எம்பிக்கள் தங்களது ஆதரவை இன்று திரும்பப் பெற்றுக் கொண்டனர். கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். நெருக்கடி அதிகரித்த நிலையிலும் அதிபரும், பிரதமரும் பதவியில் நீடித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று இலங்கை நிதியமைச்சராக பொறுப்பேற்ற அலி சாப்ரி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிங்க - இலங்கை பிரதமர் இல்லம் முன்பாக பொதுமக்கள் போராட்டம் - திணறும் போலீசார்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்திருந்தார். இதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. கோத்தபய மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அரசு நிர்வாகத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மித மிஞ்சிய கடன் சுமையால் சிக்கித் தவிக்கும் இலங்கை, பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை பன்மடங்கு உயர்ந்ததுடன் அவை தட்டுப்பாட்டில் இருப்பதால் கொந்தளித்த பொதுமக்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க - 'போர்க் குற்ற விசாரணையை புதின் எதிர்கொள்ள வேண்டும்' : அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
திடீர் திருப்பமாக நேற்று அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை தவிர்த்து மற்ற அனைத்து அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்தார்கள். இதன் தொடர்ச்சியாக அனைத்துக் கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கு அதிபர் கோத்தபய அழைப்பு விடுத்திருந்தார். இதனை எதிர்க்கட்சிகளை புறந்தள்ளிய நிலையில் இன்று ஆளும் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசியல் நிலைத்தன்மையை இலங்கை இழந்துள்ளது. நிலைமை சீரடைய அதிகபட்சம் ஓராண்டு வரை ஆகலாம் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.